இது யாருக்கு எதிரான பந்த்?-வெங்கய்யா கேள்வி
சென்னை: திமுக அரசுக்கு இலங்கை தமிழர்களுக்காக நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. இந்த பந்த் மன்மோகன், சோனியா, மத்திய அரசு இவர்களில் யாருக்காவது எதிரானதா அல்லது திமுகவுக்கே எதிரானதா? என்பதை அக்கட்சி விளக்க வேண்டும் என வெங்கய்யா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக தேர்தல் பிரச்சாரம் கூட்டம் சென்னஐ மயிலை மாங்கொல்லையில் நடந்தது. இதில் பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு, பாஜக தலைவரும், தென் சென்னை வேட்பாளருமான இல கணேசன், வடசென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ராமநாதபுரம் வேட்பாளர் திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டணி கட்சி சார்பில் சமத தலைவர் சரத்குமார், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட தென் சென்னை மற்றும் வடசென்னை வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்கள்.
கூட்டத்திற்கு பாஜக தென்சென்னை மாவட்ட தலைவர் டால்பின் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அப்போது வெங்கய்யா நாயுடு பேசுகையில்,
நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. பாஜக ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இறக்குமதி செய்கிறார்கள்.
50 ஆண்டு காலமாக ஆட்சி செய்த காங்கிரஸ் நாட்டை சீரழித்து விட்டது. வறுமை, கல்வியின்மை, குடிநீர் பிரச்சினை, தீவிரவாதம் என எந்த பிரச்சினையுமே அவர்களால் தீர்க்க முடியவில்லை.
பாஜகவின் 5 ஆண்டு ஆட்சி காலத்தில் 4 வழி சாலை மூலம் இந்தியாவின் அனைத்து நகரங்களையும் இணைத்தோம். ஆனால் காங்கிரசால் 50 ஆண்டு ஆட்சியில் நாடு முழுவதும் ஒரு வழிசாலை கூட அவர்களால் போட முடியவில்லை.
காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் பதவிக்கு இப்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அவர்களது கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறி கொண்டு இருக்கிறது. பலவீனம் அடைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு இதுவே கடைசி தேர்தலாக இருக்கும்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பலியாகி வருகிறார்கள். அதை தடுத்து நிறுத்த முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு தந்தி கொடுக்கிறார். தந்தி அடிப்பதாலோ, பந்த் நடத்துவதாலோ பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமா?
திமுக நடத்திய பந்த், மன்மோகன், சோனியா, மத்திய அரசு இவர்களில் யாருக்கு எதிரானது அல்லது உங்களுக்கே எதிரானதா? இது தமிழக மக்களை ஏமாற்றும் மோசடி வேலை என்றார் வெங்கய்யா.
கலாமை பெருமைபடுத்தியவர்களுக்கு ஓட்டு... சரத்குமார்
கூட்டத்தில் சரத்குமார் பேசுகையில்,
1998ம் ஆண்டு அணுகுண்டு சோதனை மூலம் அப்துல்கலாமை உலகிற்கு எடுத்து காட்டிய பெருமையும், ஜனாதிபதியாக்கிய பெருமை பாஜகவுக்கு தான் உண்டு.
2வயது குழந்தை முதல் முதியவர் வரை அப்துல்கலாம் மீண்டும் ஜனாதிபதி ஆக வேண்டும் என எதிர்பார்த்தனர். ஆனால் காங்கிரசும் திமுகவும் தான் கலாமை மீண்டும் ஜனாதிபதியாவதை தடுத்தது. மதவாத இல்லாத ஆட்சியை அத்வானியால் தான் தர முடியும் என்றார் சரத்குமார்.