100 நாளில் நாட்டை நிமிர்த்தி விடுவேன்!-பிரதமர்
கௌஹாத்தி: மீண்டும் பிரதமரானால் 100 நாட்களில் இந்தியப் பொருளாதாரத்தை 'நிமிர்த்தி'விடுவதாகக் கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன்சிங்.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் இதை அவர் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி:
சில மாதங்களுக்கு முன்பு தனது அரசு அறிவித்த நிதிச் சலுகைகளின் பலன்கள் வெகு அருகில் தெரியத் தொடங்கியுள்ளன.
பொருளாதாரம் மந்தத்திலிருந்து மீட்சிக்குத் திரும்பும் இந்த முக்கியமான காலகட்டத்தில் தேர்தல் வந்திருக்கிறது. மீண்டும் எனது தலைமையிலான அரசு வரும்போது, அடுத்த 100 நாட்களுக்குள் முழுமையான பலன்களை இந்தியப் பொருளாதாரம் உணரத் தொடங்கும்.
அதேபோல புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் நேரம் நெருங்கி வருகிறது. சிமெண்ட், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் கட்டுமானத் துறையில் கணிசமான புதிய வேலைவாய்ப்புகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் அரசின் இந்த பொருளாதாரச் சலுகைகளால் அடுத்த ஆண்டில் 9 முதல் 10 சதவிகிதம் வரை பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி கவர்னரிடம் இதுகுறித்து விரிவாக விவாதித்துள்ளேன். விரைந்த பொருளாதார வளர்ச்சிக்கான பல திட்டங்களை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது.
கறுப்புப் பண விவகாரத்தைப் பொருத்தவரை, அதை மீண்டும் நமது பொருளாதாரத்துக்குத் திருப்பும் முயற்சியில் காங்கிரஸ் அரசும் உள்ளது. ஆனால் எந்தெந்த நாட்டில் கறுப்புப் பணம் உள்ளது என்ற விவரம் முழுமையாகத் தெரியாது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவது முழுமையான தகவல், ஆதாரம் இல்லாதது. நம்மோடு ஒத்த கருத்துடைய கட்சிகளோடு இதுகுறித்துப் பேசி வருகிறோம், என்றார் மன்மோகன் சிங்.