ஐ.நா. பிரதிநிதி ஜான் ஹோம்ஸ் கொழும்பு விரைகிறார்
கொழும்பு: போர் முனையில் சிக்கியுள்ள மக்களின் நிலை, இடம் பெயர்ந்து வந்தவர்களுக்கு இலங்கை அரசு செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்து ஆராய ஐ.நா. மனிதாபிமான விவகாரப் பிரிவு தலைவர் ஜான் ஹோம்ஸ் இன்று கொழும்பு வருகிறார்.
போரினால் பாதித்த பகுதிகளுக்கு மனிதாபிமான குழுவை அனுப்ப இலங்கை அரசிடம் ஐ.நா. கோரிக்கை விடுத்தது. ஆனால் அதை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. வெளியிலிருந்து பிரதிநிதிகள் குழுவை அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் இலங்கையிலிருந்தே ஒரு குழுவை அனுப்பலாம் என அது கூறியுள்ளது.
இந்த நிலையில் போர் பாதித்த பகுதிகளில் மக்களின் நிலை, போர் முனையில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி, இடம் பெயர்ந்து வந்த மக்களுக்கு இதுவரை செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆராய ஜான் ஹோம்ஸ் கொழும்பு வருகிறார்.
மேலும் வவுனியா முகாம்களில் தடுத்து அடைக்கப்பட்டுள்ள 13 ஐ.நா. பணியாளர்களை மீட்பது குறித்தும் அவர் இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார்.
தற்போது ஐ.நா. மனிதாபிமான விவகார பிரிவின் இலங்கைக்கான அதிகாரி நீல் புனே யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
வன்னிப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்து சென்றவர்களின் தற்போதைய நிலை குறித்து அவர் ஆராயவுள்ளார்.












Click it and Unblock the Notifications