பிரபாகரனை நெருங்குகிறது ராணுவம்-6 கி.மீட்டர் தூரமே பாக்கி!
விடுதலைப் புலிகளின் இருப்பிடத்தை மிகவும் குறுக்கி விட்ட ராணுவம் தற்போது 6 கிலோமீட்டர் பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகளை முடக்கியுள்ளனர்.
இருப்பினும் கூட பிரபாகரனைப் பிடிப்பது எளிதாக இல்லை. காரணம்,இன்னும் விடுதலைப் புலிகளின் வீரர்கள் தொடர்ந்து ராணுவத்திற்கு கடும் பதிலடி கொடுத்துக் கொண்டிருப்பதால்.
தற்போது 6 கிலோமீட்டர் தூரத்தில் பிரபாகரன் இருப்பதாக ராணுவம் கூறுகிறது. அந்தப் பகுதியை நோக்கி நாலாபுறமும் ராணுவம் மிக மிக மெதுவாக முன்னேறி வருகிறது.
இதுகுறித்து 58வது பிரிவு கமாண்டர் சாவேந்திர டிசில்வா கூறுகையில், அப்பகுதியில் பெருமளவில் அப்பாவி மக்கள் உள்ளனர். எனவே வேகமாக முன்னேறினால் அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே மிக மிக மெதுவாக முன்னேறி வருகிறோம்.
விடுதலைப் புலிகளை மிகக் குறுகிய இடத்தில் முடக்கி விட்டாலும் கூட, அவர்கள் இன்னும் கடும் எதிர்ப்புடன் போராடி வருகின்றனர். அதேசமயம், பிரபாகரன் இங்குதான் இருக்கிறார் என்பதற்கு உறுதியான அறிகுறி எதுவும் இல்லை.
ஆனாலும், தற்போது நாங்களை முற்றுகையிட்டுள்ள இடத்துக்குள்தான் பிரபாகரன் இருக்க முடியும். அவர் கடல் மார்க்கமாக தப்பிச் செல்லவும் வழி உண்டு.
போரின் கடைசிக் கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். எனவே பொறுமையாகவும், நிதானமாகவும் கடைசிப் போரை வெல்ல முடிவு செய்துள்ளோம் என்றார்.