நடுரோட்டில் விஜயகாந்த் திடீர்' போராட்டம்-பணிந்த போலீஸ்
பெண்ணாகரம்: தனது கட்சியின் தொண்டர்கள் வந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ததால் பெண்ணாகரத்தில் விஜயகாந்த் திடீரென தனது வேனை நடுரோட்டில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தேமுதிக தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பெண்ணாகரம் வந்தார் விஜய்காந்த்.
அவரது கூட்டத்துக்கு பல அருகாமை கிராமங்களைச் சேர்ந்த தொண்டர்கள் கட்சிக் கொடி கட்டப்பட்ட சரக்கு வேன்களில் அங்கு வந்தனர்.
இது விதிகளுக்கு மாறானது என கூறிய போலீசார் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து விஜயகாந்த்திடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மிகக் கோபமாகப் பேசிய விஜயகாந்த்,
ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் வாகனங்களில் வந்தால் அவர்களின் வாகனங்களை செல்ல அனுமதிக்கிறீர்கள். ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் என்னைக் காண எனது தொண்டர்கள் வாகனங்களில் வருகிறார்கள். அவர்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள்?.
தேமுதிக அமைதியை விரும்புகிறது. நான் எனது கட்சியில் உள்ள இளைஞர்களை நல்ல பாதைக்கு அழைத்து செல்கிறேன். அவர்களை அராஜாக பாதைக்கு கொண்டு சென்று விடாதீர்கள்.
தேமுதிகவினர் எங்கு சென்றாலும் கொடியை பிடுங்குவது, வாகனங்களை செல்ல விடாமல் தடுப்பது என தொடர்ந்து அராஜக செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக செயல் வீரர்கள் கூட்டம் என்றால் கூட பஸ்களில் அழைத்துச் செல்கிறார்கள். அவர்களின் வாகனங்களை எல்லாம் ஏன் பறிமுதல் செய்வதில்லை?. இது சம்பந்தமாக நான் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்வேன்.
போலீஸ் அதிகாரிகள் எனது தொண்டர்களின் வாகனங்களை மீண்டும் ஒப்படைக்கும் வரை நான் இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று கூறிவிட்டு வேனுக்குள்ளேயே அமர்ந்துகொண்டார்.
சாலை மறியலில் தொண்டர்கள்...
இதையடுத்து ஆவேசமான ஆயிரக்கணக்கான தொண்டர்களும் நடுரோட்டில் வேனை சுற்றி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். லீசுக்கும் திமுகவுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
சுமார் 1 மணி நேரம் கடந்தபோதும் விஜயகாந்த் நகரவில்லை. இதையடுத்து டிஎஸ்பி பஞ்சவர்ணம், உதவி தேர்தல் அலுவலர் சண்முகம், தாசில்தார் மல்லிகா ஆகியோர் அங்கு வந்து விஜயகாந்துடன் பேச்சு நடத்தினர்.
ஆனால், வாகனங்களைத் தந்தால் மட்டுமே போவேன் என்று விஜய்காந்த் கூறிவிட்டார். இதையடுத்து பறிமுதல் செய்த வாகனங்களை ஒப்படைத்து விடுவதாகவும், வழக்கு ஏதும் போட மாட்டோம் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதைத் தொடர்ந்து தனது 'வேன் உள்ளிருப்புப் போராட்டத்தை' கைவிட்ட மீண்டும் சிறிது நேரம் தொண்டர்களிடையே உரையாற்றிவிட்டு வெற்றிகரமாக அங்கிருந்து கிளம்பினார்.












Click it and Unblock the Notifications