ஆஸி.க்கு படகு மூலம் வந்த அகதிகள் மீட்பு
அந்தப் படகில் 54 பயணிகளும், 2 ஊழியர்களும் இருந்தனர். அவர்களை ஆஸ்திரேலிய கடலோர ரோந்து அதிகாரிகள் படகில் சென்று தடுத்து நிறுத்தினர் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பாப் டெபுஸ் கூறியுள்ளார்.
படகில் இருந்த அனைவரும் கடற்படைக் கப்பலில் ஏற்றப்பட்டனர். டார்வின் நகரிலிருந்து 900 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் இவர்கள் மீட்கப்பட்டனர்.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் பிடிபட்ட 8வது படகு இது என்பது குறிப்பிடத்தக்கது.
படகில் வந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் இலங்கைத் தமிழர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய கடல் வழியாக இந்தோனேசியா, மலேசியா, இலங்கையிலிருந்து பலர் திருட்டுத்தனமாக வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக இலங்கையிலிருந்து பல தமிழர்கள் அகதிகளாக படகுகள் மூலம் ஆஸ்திரேலியா வருகின்றனர். அல்லது மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கின்றனர்.
ஏப்ரல் 16ம் தேதி இதுபோல வந்த ஒரு அகதிகள் படகில் திடீரென குண்டுவெடித்ததில் அதில் இருந்த 5 ஆப்கான் அகதிகள் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக இந்தோனேசியாவில் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனராம். இதில் 32 இலங்கைத் தமிழர்கள் ஒரு படகில் ஏற்றப்பட்டு காத்திருப்பதாக கூறப்படுகிறது.
அகதிகள் வருகை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இதை சமாளிக்க மலேசியா, இலங்கைக்கு தனது பிரதிநிதிகளை ஆஸ்திரேலியா அனுப்பி வைத்துள்ளது.