விடுதலை சிறுத்தைகளுக்கு ஸ்டார் சின்னம்-உச்ச நீதிமன்றம்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 13ம் தேதி நடக்கிறது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் போட்டியிடுகிறது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் தேர்தலில் தங்களுக்கு நட்சத்திர சின்னம் வழங்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியில் நட்சத்திர அடையாளம் இடம் பெற்றுள்ளது. எனவே இதே சின்னத்தை கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என கோரியது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில ஆஜராகிய வக்கீல் மீனாட்சி அரோரா கூறுகையி்ல், விடுதலை சிறுத்தைகள் அமைப்பு கேட்கும் நட்சத்திர சின்னம், ஏற்கனவே மிசோரம் மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சி ஒன்றுக்கு வழங்கப்பட்டுவிட்டது. இதனால் அவர்களுக்கு நட்சத்திர சின்னம் வழங்கமுடியாது என வாதாடினார்.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆஜரான ராஜீவ் தத்தா பதில் கூறுகையில், விடுதலை சிறுத்தை கட்சி தேசிய கட்சி அல்ல. அது மாநில கட்சி தான். அதுவும் இரண்டு தொகுதிகளில் மட்டும் தான் போட்டியிடுகிறது.
மிசோரம் மாநிலத்தில் நட்சத்திர சின்னத்தை கொண்ட கட்சியும் தேசிய கட்சி அல்ல. இதனால் விடுதலை சிறுத்தைகளுக்கு நட்சத்திர சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரினார்.
இதையடுத்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு இரண்டு தொகுதியிலும் நட்சத்திர சின்னம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
நட்சத்திர சின்னம் கிடைத்த மகிழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் உற்சாகத்துடன் தேர்தல் பிரசாரத்தை தொடர்ந்து வருகின்றனர்.