முன்பே செய்திருந்தால் பல ஆயிரம் உயிர்கள் தப்பியிருக்குமே-ராமதாஸ்
சென்னை: இன்று உண்ணாவிரதம் இருந்த முதல்வர் கருணாநிதி இதை 3 மாதங்களுக்கு முன்பு செய்திருந்தால் பல ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் உயிர் பிழைத்திருப்பார்களே என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கருணாநிதியின் உண்ணாவிரதத்தை அதிமுக கூட்டணியைச் சேர்ந்த பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் கருணாநிதி இதுவரை இலங்கைப் பிரச்சினையில் நடத்திய கபட நாடகங்களிலேயே உச்சகட்டமானது இதுதான்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நடத்தியதற்குப் பதில் 3 மாதங்களுக்கு முன்பு அவர் நடத்தியிருந்தால், பல ஆயிரம் அப்பாவித் தமிழர்களின் உயிர்கள் பிழைத்திருக்குமே.. எனவே இது கண்துடைப்பு நாடகம்.
ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி அவருக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
தோல்வி பயத்தில்.. சிபிஎம் தாக்கு:
மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறுகையில், பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில், பொது வேலைநிறுத்தம், இப்போது உண்ணாவிரதம் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருப்பது கண்துடைப்பு நாடகம், மக்களை திசை திருப்பும் நாடகம். தோல்வி பயத்தால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளார் கருணாநிதி என்றார்.
திசை திருப்பல்.. தா.பாண்டியன்:
இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், தேர்தல் முடிவு என்ன என்பதை உணர்ந்து விட்டார் கருணாநிதி. எனவேதான் மக்களை திசை திருப்பும் வகையில், இந்த உண்ணாவிரதத்தை நடத்தியுள்ளார்.
உண்ணாவிரதம் என்ற பெயரில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வெற்றியை நோக்கி அமைதியான முறையில் போய்க் கொண்டிருக்கும் எங்களை சீர்குலைக்க அவர் மேற்கொண்ட முயற்சியே இந்த உண்ணாவிரதம் என்றார் தா.பாண்டியன்.
அதிகாரிகள் தான் தீர்மானிக்கின்றார்களா?...:
புதுச்சேரியில் நிருபர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா,
இலங்கைக்கு இந்தியா ராணுவ ரீதியான உதவிகளை செய்து வருவதாக இலங்கையில் உள்ள ராணுவ அமைச்சரே கூறுகிறார். இலங்கைக்கு சென்ற சிறப்பு தூதர்கள் சிவசங்கர் மேனன், நாராயணன் ஆகியோர் போர் நிறுத்தத்தை வலியுறுத்தாமல் போருக்கு பின்பு செய்யப்படும் மறு சீரமைப்பு பற்றி பேசுகிறார்கள்.
அதிகாரிகளால் தான் இலங்கை பிரச்சனையில் இவ்வளவு குழப்பம் ஏற்பட்டது. இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கைகளை அதிகாரிகள் தான் தீர்மானிக்கின்றார்களா என்பதை காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.