தனி ஈழம்-'இவ்வளவு நாளாக ஏன் ஜெ. பேசவில்லை?'
வேலூர்: தனி ஈழம்தான் இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு எனக் கூறும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அதுகுறித்து இவ்வளவு நாளாக பேசாதது ஏன் என்று கேட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
வேலூர் தேமுதிக. வேட்பாளர் சவுகத்செரீப்பை ஆதரித்து விஜயகாந்த் நேற்று காலை ஒடுகத்தூர், அணைக்கட்டு, ஊசூர், வேலூர் மக்கான் சந்திப்பு ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின்போது அவர் பேசுகையில்,
இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகாண தனி ஈழம் அமைப்பது தான் ஒரே வழி, தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயலலிதா கூறி வருகிறார். தமிழர்கள் செத்தபிறகு தனிஈழத்தை அமைப்பது எதற்காக?
தனி ஈழம் அமைப்பது பற்றி முதன் முதலில் 1976-ம் ஆண்டில் செல்வநாயகம் அறிவித்தார். ஆனால் இப்போது ரவிசங்கர் குருஜி சொல்லி தான் ஜெயலலிதாவிற்கு இலங்கை தமிழர்களின் பிரச்சினை பற்றி தெரியுமா? ஏற்கனவே 2 முறை முதல் மந்திரி ஆக இருந்த அவருக்கு இப்போது தான் தனி ஈழம் பற்றி தெரியுமா?
பல ஆண்டுகளாக இருக்கும் ஈழ தமிழர்களின் பிரச்சினை இன்றைக்கோ நேற்றைக்கோ தான் ஜெயலலிதாவிற்கு தெரிகிறது. எல்லா தமிழர்களும் செத்த பிறகு தான் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்கின்றன. நான் சமீபத்தில் அரசியலுக்கு வந்தவன். ஈழத்தமிழர்கள் பற்றி இப்போது முதன்முதலில் நான் சொன்னால் கூட பரவாயில்லை.
ஆனால் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்த ஜெயலலிதா தனி ஈழம் அமைப்பதாக இப்போது சொல்கிறார். இதுவரை அவர் ஏன் குரல் கொடுக்கவில்லை. இன்றைக்கு மட்டும் குரல் கொடுப்பது ஏன்?
குண்டு வீச்சில் ஏராளமான தமிழர்கள் இலங்கையில் சாகிறார்கள். அங்குள்ள தமிழர்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை, சாப்பாடு இல்லை.
எம்.ஜி.ஆர். அன்றைக்கு சொன்னது போல், இலங்கை தமிழர்களுக்கு விமானத்தின் மூலம் சாப்பாடு கொடுங்கள் மருந்து கொடுங்கள் என்று நான் சொன்னேன். அதைக்கூட தற்போதைய அரசு சொல்லவில்லை, செய்யவும் இல்லை.
2 நாட்களுக்கு முன்பு கருணாநிதி பந்த் அறிவித்தார். ஒரு அரசு மறைமுகமாக சொன்னால் போதும் எல்லோரும் ஆதரவு கொடுக்கத்தான் செய்வார்கள். பஸ் ஓடவேண்டும் கடை திறக்க வேண்டும் என்று அரசு வெளிப்படையாக சொல்லிவிட்டு மறைமுகமாக அவற்றை மூடச் சொல்கிறார்கள்.
தமிழக மக்களை இந்த இரு கட்சிகளும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். தே.மு.தி.க. வேட்பாளர்களை ஜெயிக்க வைத்தால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.
இலங்கை பிரச்சினை பற்றி சோனியா காந்தியுடன் கருணாநிதி பேசினால் பிரச்சினை உடனே தீரும். ராணுவத்தை அனுப்பினால் பிரச்சினை தீரும் என்றால் மத்திய அரசு அனுப்பாமல் உள்ளது.
நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு தி.மு.க. அரசும் அ.தி.மு.க. அரசும் எந்த நல்ல திட்டங்களையும் செய்யவில்லை. விவசாயிகள் நன்றாக வாழ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
பாலாற்றில் ஆந்திர அரசு தண்ணீர் விடாததால் வேலூர் மாவட்ட விவசாய நிலங்கள் காய்ந்து கிடக்கின்றன. ஆந்திராவில் நிறைய தண்ணீர் இருக்கிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மாட்டார்கள். ஆனால் ஓட்டு கேட்க மட்டும் காங்கிரசார் வருகிறார்கள்.
தேமுதிகவிற்கு ஒரு சந்தர்ப்பத்தை இந்த தேர்தலில் தாருங்கள் என்றார் அவர்.