வெளிநாட்டு பணியாளர்-திரும்ப அழைக்கும் டிசிஎஸ்!
மும்பை: சிக்கனம் கருதி வெளிநாட்டில் இருக்கும் தங்களது ஊழியர்களை டிசிஎஸ் இந்தியாவுக்கே திரும்ப அழைக்க போவதாக அறிவித்துள்ளது டிசிஎஸ்.
பொருளாதார நெருக்கடி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஆட்டிபடைத்து வருகிறது. சிக்கன நடவடிக்கையாக உலகின் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் பெருமளவு ஆட்குறைப்பு செய்து வருகின்றன.
இந்நிலையில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வேலை பார்க்கும் தங்களது ஊழியர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன் கூறுகையில்,
நாங்கள் இந்தியாவில் வைத்தே வெளிநாட்டு வேலைகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் ஆன்சைட் பணியாளர்களுக்காகும் தேவையில்லாத பண விரயத்தை தடுக்க முடியும். இதனால் வெளிநாட்டு இருக்கும் வேலைகளை முடக்குவதாகவோ, மூடுவதாகவோ யாரும் நினைக்க வேண்டாம்.
இதற்கு முன்னோட்டமாக கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை சில வெளிநாட்டு ஊழியர்களை இந்தியாவுக்கு வரவழைத்தோம். இதன்மூலம் மட்டும் நிறுவனத்துக்கு ரூ. 121 கோடி லாபம் கிடைத்துள்ளது. இதனால் இந்த திட்டத்தை தொடர இருக்கிறோம்.
விரைவில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இருக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்களை திரும்ப அழைக்க இருக்கிறோம்.
முன்னதாக இந்தியாவில் 24,855 பேரை வேலைக்கு எடுத்துள்ளோம். அமெரிக்காவில் புது முகங்களாக 250 பேரையும், சீனாவில் ஒரு சிலருக்கும் பணி உத்தரவு வழங்கியுள்ளோம்.
சத்யம் ஊழியர்களுக்கும் வாய்ப்பு!
அதேநேரம் ஊழியர்கள் யாரையும் நீக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை. ஆனால் இம்முறை ஊழியர்கள் சம்பள உயர்வை எதிர்பார்க்க முடியாது. சத்யம் நிறுவன ஊழியர்களை வேலைக்கு சேர்ப்பதில்லை என முடிவு செய்திருந்தோம். ஆனால் தற்போது அந்த முடிவில் மாற்றம் செய்துள்ளோம். விண்ணப்பங்களை பரிசீலிக்க முடிவெடுத்துள்ளோம்.
சரிவர வேலை பார்க்காத ஊழியர்களை ஆண்டுக்கு இரு முறை நீக்குவது வழக்கம். இது தொடரும் என்றார் சந்திரசேகரன்.