கொளத்தூர் மணிக்கு குண்டாஸ் செல்லாது-உயர்நீதிமன்றம்
சென்னை: பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
கொளத்தூர் மணி திண்டுக்கல்லில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து மார்ச் 2-ந்தேதி கைது செய்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல் கலெக்டர், கொளத்தூர் மணி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் கொளத்தூர் மணியின் சகோதரர் பழனிச்சாமி, தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் தர்மராஜ், சுப்பாராவ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மணியைக் கைது செய்தது செல்லாது என்று கூறி விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications