இலங்கை: திமுகவுக்கு தேர்தல் பிரச்சினை இல்லை - கனிமொழி
சென்னை: திமுகவைப் பொறுத்தவரை இலங்கை விவகாரம் தேர்தல் பிரச்சினை இல்லை என்று ராஜ்யசபா திமுக எம்.பியும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி..
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்படும் என இலங்கை அரசு கூறியுள்ளது. அதை நீங்கள் நம்புகிறீர்களா...?
கனிமொழி - நிச்சயம் நம்புகிறேன். அவர்கள் உறுதியளித்துள்ளனர். எனவே நாம் நம்புவோம். நம்புவதைத் தவிர வேறு வாய்ப்பு ஏதும் இல்லையே. மக்களைக் காப்பது மட்டும் தொடரும், சண்டையை நிறுத்துகிறோம் என்று இலங்கை கூறியுள்ளது. இதை நாம் ஏன் நம்பாமல் இருக்க வேண்டும்.
இலங்கைப் பிரச்சினை, திமுகவுக்கு இப்போது பெரும் தேர்தல் பிரச்சினையாகி விட்டதாக உணர்கிறீர்களே..?
கனிமொழி - எல்லோரும் நினைப்பது போல இலங்கைப் பிரச்சினை திமுகவுக்கு பெரிய தேர்தல் பிரச்சினையே அல்ல. 1956ம் ஆண்டு முதலே இலங்கைப் பிரச்சினையை சந்தித்து வருகிறது திமுக. நாங்கள் எப்போதும் ஈழத் தமிழர்களுடன்தான் இருக்கிறோம். அவர்களது உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.
இது எங்களுக்கு தேர்தல் காலத்துப் பிரச்சினை அல்ல. அவர்களுடனேயே நாங்கள் இருக்கிறோம், அவர்களுடனேயே இருந்து போராடுகிறோம் என்ற உணர்வுதான் எங்களுக்கு உள்ளது.
சில கட்சிகளுக்கு இது தேர்தல் பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு கண்டிப்பாக தேர்தல் நேரத்துப் பிரச்சினை அல்ல இலங்கை.
வாக்காளர்களை இலங்கைப் பிரச்சினை பாதிக்குமா..?
கனிமொழி - நிச்சயம் வாக்காளர்களை இலங்கைப் பிரச்சினை பாதிக்காது. இது தேர்தலில் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதை தேர்தல் நேரத்துப் பிரச்சினையாகவும் பார்க்கத் தேவையில்லை. அதற்கும் மேலான முக்கியமான பிரச்சினை இது. இது மக்களின் உரிமைகள் குறித்த பிரச்சினை, மக்களின் வாழ்க்கை குறித்த பிரச்சினை. எனவே இது தேர்தல் பிரச்சினை அல்ல.
மேலும் இது அரசியல் பிரச்சினையாகவும் மாறி விடக் கூடாது. இது அங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள தமிழர்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையும் கூட. இது மனிதாபிமான பிரச்சினை. ஒட்டு மொத்த இந்தியாவும் சம்பந்தப்பட்ட பிரச்சினை இது. ஒட்டுமொத்த இந்தியர்களும் கவலைப்பட வேண்டிய பிரச்சினை இது.
ராஜீவ் காந்தி கொலைக்கு எந்த அரசியல் கட்சியும் பொறுப்பேற்கவில்லையே..ஏன்..?
கனிமொழி - எதற்கு அரசியல் கட்சிகள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்? யார் மீது எதைத் திணிக்க விரும்புகிறீர்கள்? எந்த அரசியல் கட்சிக்கும் ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தம் இல்லை.
முதலில் விடுதலைப் புலிகள், இலங்கைத் தமிழர் பிரச்சினை இரண்டுக்கும் வித்தியாசப்படுத்தி பார்க்க தெரிய வேண்டும். இலங்கைப் பிரச்சினை குறித்துத பேசத் தொடங்கும் முன்பு அதில் தெளிவாக இருக்க வேண்டும். குறிப்பாக வட இந்திய மீடியாக்கள் இதில் தெளிவாக இல்லை.
இலங்கைப் பிரச்சினை மக்கள் பிரச்சினை. ஈழத்து மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக அடிமைகள் போல அவர்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். இது முக்கியமானது. இதுதான் பிரச்சினை. இதைப்பற்றித்தான் அத்தனை பேரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் விடுதலைப் புலிகள் பின்னால் வந்தவர்கள்தான். எனவே மீடியாக்கள், விடுதலைப் புலிகளையும், இலங்கைப் பிரச்சினையையும் சேர்த்துப் பார்த்துக் குழப்பக் கூடாது.
பிரபாரகன் எனது நண்பர் என்று முதல்வர் கருணாநிதி கூறினார், பின்னர் மறுத்தார்..
கனிமொழி - இப்போது பிரபாரகன் பிரச்சினை இல்லை. ஈழத்து மக்கள்தான் பிரச்சினை. எனவே பிரபாகரன் குறித்து முதல்வர் பேசியதை பரபரப்பாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஈழத்து மக்களின் துயர் குறித்தும், ஈழத்து மக்களின் பிரச்சினைகள் குறித்தும்தான் நாம் முக்கியமாக கவலைப்பட வேண்டும்.
தான் என்ன சொன்னேன் என்பதை முதல்வர் தெளிவுபடுத்தி விட்டார். விளக்கமும் கூறி விட்டார். அதற்கு மேல் இதில் போக வேண்டாம். அங்குள்ள மக்களுக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து மட்டுமே நாம் கவலைப்படுவோம் என்றார் கனிமொழி.












Click it and Unblock the Notifications