For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன்மோகன் மட்டுமே பிரதமராக முடியும் - ஆக வேண்டும்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: பிரதமர் பதவிக்கு வேறு யாரும் வரக் கூடாது, வரவும் முடியாது. மன்மோகன் சிங் மட்டுமே அந்தப் பதவிக்கு வர முடியும், வர வேண்டும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்கள் கருணாநிதியைச் சந்தித்தனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், கருணாநிதி அளித்த பதில்களும்..

கேள்வி: மன்மோகன் சிங்கைத் தவிர்த்து வேறு யாரேனும் பிரதமராக வேண்டுமென்று நீங்கள் ஆலோசனை சொல்வீர்களா?

பதில்:- மன்மோகன் சிங்கைத் தவிர்த்து வேறு யாரும் பிரதமராகக் கூடாது. முடியாது.

கேள்வி: உங்களுடைய உண்ணாவிரதத்திற்கு ஏற்பட்ட பயன் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?

பதில்: திருப்தி அளிக்கிறது.

கேள்வி: நேற்றைய உண்ணாவிரதத்திற்கான வரவேற்பு - உங்கள் வாழ்நாள் சாதனைகளிலே ஒன்றாகக் கருதுவீர்களா?

பதில்: என்னுடைய வாழ்நாள் இன்னும் முடியவில்லையே? அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

கேள்வி: நீங்கள் போர் நிறுத்தம் என்று சொல்கிறீர்கள். அவர்கள் கனரக ஆயுதங்களை உபயோகப்படுத்த மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதை வைத்து நீங்கள் ஏமாற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகிறார்களே?

எதிர்க்கட்சிகள் அப்படித்தான்...

பதில்: எதிர்க்கட்சிகள் என்றால் அப்படித் தான் சொல்வார்கள். சொல்லாமல் இருந்தால் அவர்கள் எதிர்க்கட்சிகள் அல்ல. உங்களைப் போன்ற ஒருவர் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம், ப.சிதம்பரம் போர் நிறுத்தம் என்று சொல்லியிருக்கிறாரே, அதற்கு என்ன பதில் என்று கேட்டிருக்கிறார். அதற்கு ராஜபக்சே பதில் சொல்லியிருக்கிறார். அதைப் படிக்கிறேன்.

"கன ரக ஆயுதங்களை உபயோகிக்க மாட்டோம் என்றும், விமானத் தாக்குதல்களை நடத்த மாட்டோம் என்றும் சொன்னால் அதற்குப் பெயர் என்ன? அது முழுக்க முழுக்க ஒரு போர் நிறுத்தம் போன்றது தான். நான் கூறுகிறேன், படை வீரர்கள் முன்னேறுகிறார்கள். அதைப் பார்க்கும்போது அது உண்மையான போரைப் போலத் தான் தெரியும். ஆனால் கன ரக ஆயுதங்களை உபயோகப்படுத்த மாட்டோம் என்கிற போது அது என்ன தெரியுமா? அது ஒரு போர் அல்ல'' என்று சொல்லி இருக்கிறார். அதைத் தான் சிதம்பரம் சொல்லியிருக்கக் கூடும்.

கொஞ்சம் கொஞ்சம் நடக்கக் கூடும்...

கேள்வி: இன்று காலையில் கூட விடுதலைப் புலிகள் மீது கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வந்திருக்கிறதே?

பதில்: மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பார்களே, அதைப் போல எல்லா போர் முனைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் இதுபோல நடக்கக் கூடும். அதுபோல நடந்திருக்கும் என்று கருதுகிறேன்.

கேள்வி: நேற்று ராஜபக்சே அளித்த உறுதி மொழிக்கிணங்க அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட மாட்டார்கள் என்று நம்புகிறீர்களா?

பதில்: நம்புகிற அளவுக்கு நடக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துகிறேன்.

கேள்வி: தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் இந்தியப் பிரச்சினைகள், தமிழ்நாட்டுப் பிரச்சினைகள் பற்றி பேசாமல் இலங்கைப் பிரச்சினையைப் பற்றி மட்டுமே பேசுகிறார்களே?

பதில்: வேறு பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கு, அவர்களுக்கு இடம் இல்லை, வழி இல்லை. அதனால் இதைப் பேசுகிறார்கள்.

கேள்வி: இந்த உண்ணாவிரதத்தை இருபது நாட்களுக்கு முன்பு செய்திருந்தால் இன்னும் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று சொல்கிறார்களே?

பதில்: திருமாவளவன், டாக்டர் ராமதாஸ், கி.வீரமணி ஆகியோர் எல்லாம் என்னிடம் வந்து பேசிய போது - அன்றைக்கே நான் உண்ணாவிரதத்தைத் தொடங்கட்டுமா என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே கேட்டேன். கூடாது, கூடாது நீங்கள் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது, வேறு மாதிரி போராட்டம் தான் நடத்த வேண்டுமென்று அவர்கள் சொன்னார்கள். அதற்கு திருமாவளவன் சாட்சி, கி. வீரமணி சாட்சி, டாக்டர் ராமதாசுக்கு மனச்சாட்சி.

கேள்வி: இந்தப் பிரச்சினை தேர்தல் முடிவை எந்த அளவிற்குப் பாதிக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: எந்த அளவிற்கும் பாதிக்காது. கடுகளவும் பாதிக்காது.

கேள்வி: தமிழ் ஈழத்தை ஆதரிப்பது தேசத் துரோகம் என்று கபில்சிபல் சொல்லியிருக்கிறாரே?

பதில்: திராவிட நாடு கேட்ட போது கூட அதை தேசதுரோகம் என்று தான் சொன்னார்கள். அது தேச துரோகமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் அண்ணா, திராவிட நாடு பிரிவினையையே கைவிட்டார். பிரிவினைக்கான காரணங்களை மட்டும் சொன்னார்.

கேள்வி: தமிழ் ஈழத்தை அண்ணாவும் கேட்டார், நானும் கேட்டேன் என்று சொன்னீர்கள். ஆனால் தமிழ் ஈழத்திற்கு குறைவாகக் கிடைத்தால் அப்போதும் சந்தோஷப்படுவேன் என்று சொன்னீர்களே?

பதில்: இப்போதும் சொல்கிறேன். அங்கேயிருக்கிற அரசின் சார்பிலும் விடுதலைப் போராளிகள் சார்பிலும் கலந்து விவாதித்து, எந்தச் சுமூகமான முடிவுக்கு வந்தாலும், அது இலங்கையிலே உள்ள தமிழர்களுக்கு நல்லது செய்யுமேயானால், அதை நாங்கள் ஆதரிக்கத் தயாராக இருக்கிறோம்.

கேள்வி: இலங்கையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டுள்ளது. தனி ஈழம் தான் வழி என்று சொல்கிறார்களே?

பதில்: தனி ஈழத்தை, மிக மிக மோசமான அளவிற்குத் தாக்கிப் பேசியவர்கள் எல்லாம் இன்றைக்கு தனி ஈழம் என்று சொல்வதற்கு என்ன காரணம்? தேர்தல். தனி ஈழம், தமிழ் ஈழம் என்று ஐம்பதாண்டு காலமாக நான் பேசி வருகிறேன். தந்தை செல்வா காலத்திலிருந்து தமிழ் ஈழத்தை தி.மு.க. ஆதரிக்கிறது.

அண்ணா ஆதரித்தார், நான் ஆதரித்தேன், நான் தீர்மானமே கொண்டு வந்திருக்கிறேன், தனி ஈழத்தை, தமிழ் ஈழத்தை நாங்கள் நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறோம். இதுவரையில் தமிழ் ஈழத்தைத் தாக்கி தரக்குறைவாக பேசியவர்கள் இன்றைக்கு திடீரென்று தேர்தலிலே எப்படியும் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக தமிழ் ஈழம், தனி ஈழம் என்றெல்லாம் சொல்கிறார்கள் என்பது தான் உண்மை.

கடுகளவும் தேர்தலை இது பாதிக்காது...

கேள்வி: நேற்று ராஜபக்சே சொல்லும்போது, பிரபாகரன் பிடிபட்டால், முதலில் அவர்கள் நாட்டில் அவர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்துவிட்டு, அப்புறம் ராஜீவ் கொலை வழக்கிற்காக இந்தியாவிற்கு அனுப்புவோம் என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: அது ஜெயலலிதாவின் கோரிக்கையாகும். ஒருவேளை பிரபாகரன் பிடிபட்டால், ஜெயலலிதா 2002ல் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து, ஆவேசமாகப் பேசி, பிரபாகரனை இங்கே அனுப்ப வேண்டும், கைது செய்து அனுப்ப வேண்டும் என்று சொன்னார்களே, அந்த ஆசையை நிறைவேற்றினாலும் நிறைவேற்றுவார்கள்.

கேள்வி: விடுதலைப் புலிகள் தற்போது கடைசிக் கட்டத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிற நிலைமையில் - இலங்கைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு விடுதலைப் போராளிகளை விட்டு விட்டு மற்றவர்களோடு பேசுவார்களா?

பதில்: எப்போதும் புல் பூண்டுகள் நிலத்திலே அடியோடு அகற்றப்பட்டாலும், அதனுடைய கிளைகளாக மீண்டும் புல், பூண்டுகள் முளைப்பதற்கு அந்த மண் வளத்தில் வாய்ப்புகள் உண்டு. அது தான் விடுதலைப் போராட்டத்தினுடைய பல அத்தியாயங்களிலே ஒரு கட்டம்.

கேள்வி: அமைதி ஏற்படுவதற்கு என்ன முயற்சி எடுப்பீர்கள்?

பதில்: அங்கே எந்த முயற்சி எடுக்கப்படுகிறதோ, அந்த முயற்சியை ஆராய்ந்து, இங்கே உள்ளவர்களைக் கலந்து கொண்டு நாங்கள் ஏற்கனவே நீதியரசர்கள் கொண்ட ஒரு குழுவையும் - அவர்களுடன் அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு குழுவையும் அமைத்திருக்கிறோம் - அந்தக் குழுக்களைக் கலந்து பேசி என்னென்ன முயற்சிகளை எடுக்கலாம், எந்த வகையிலே ஒப்பந்தம் ஏற்படலாம் என்ற யோசனைகளை இலங்கை அரசுக்குக் கூறுவோம். அதை இந்திய அரசின் மூலமாக செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொள்வோம்.

கேள்வி: போர் முனையிலிருந்து அகற்றப்பட்ட ஒரு லட்சம் மக்களுக்கு நல்வாழ்வு தருவதற்கான முயற்சிகளிலே ஈடுபடுவீர்களா?

பதில்: நிச்சயமாக ஈடுபடுவேன்.

கேள்வி: இலங்கையில் முழுமையாக போர் நிறுத்தம் நடக்கும் என்று நம்புகிறீர்களா?

பதில்: நம்புகிறேன்.

கேள்வி: விடுதலைப்புலிகள் ஆயுதம் தாங்கிய போரை கைவிட்டு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு வர வேண்டுமென்று விரும்புகிறீர்களா?

பதில்: இதிலே நாங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வேறுபடவில்லை. ஒன்றுபடுகிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில சுயாட்சியைப் பெற்று - சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் சம உரிமையோடு - சட்டங்கள் இயற்றப்பட்டு - அத்தகைய ஒரு முறை அரசியல் ரீதியாக வகுக்கப்பட வேண்டுமென்று இன்றல்ல - ஏற்கனவே அக்கட்சி அறிவித்தபோதே அதை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அதையும் மீறி தமிழ் ஈழம் தான் எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று போரிட்டு அவர்கள் வெல்லுவார்களேயானால், மகிழ்ச்சி அடைவேன் என்றும் கூறியிருக்கிறேன்.

கேள்வி: இலங்கையிலே உள்ள தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டுமென்பதற்காக நீங்கள் உண்ணா விரதம் இருந்திருந்தீர்கள். ஆனால் நான்கைந்து பெண்கள் இங்கே அதே காரணத்திற்காக உண்ணாவிரதம் இருந்தவர்களைப் பற்றி?

பதில்: நான்கைந்து பெண்கள் உண்ணாநோன்பு இருந்தார்கள். நான் அவர்களுக்கு முதல்-அமைச்சர் என்ற முறையில் வேண்டுகோள் விடுத்தேன். என்னுடைய மகள் கனிமொழியை நேரடியாகவே அனுப்பி வைத்தேன். ஆனால் அவர்கள் அதற்கு இணங்க மறுத்து விட்டார்கள். அதன் பிறகு பத்து, இருபது பேர் தொடர் உண்ணாவிரதம் என்று தொடங்கினார்கள். அது இப்போது அநேகமாக இந்தப் பிரச்சினைக்குப் பிறகு அடங்கியிருக்குமென்று கருதுகிறேன். அவர்களுடைய தியாக உள்ளத்தை நான் வாழ்த்துகிறேன்.

கேள்வி: பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புகிறீர்களே, அது தேர்தல் விதி மீறல் ஆகாதா?

பதில்: இது ஒரு தொடர் நடவடிக்கை. ஏற்கனவே அனுப்பப்பட்டதின் தொடர்ச்சிதான். புதிதாக அனுப்பப்படவில்லை. இலங்கை வாக்காளர்களுக்கு அனுப்பவில்லை.

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தான் தீர்வாக அமையும் என்று காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சொல்கிறாரே?

பதில்: அப்படியே முழுமையாக அல்லாமல், காலத்திற்கேற்ப சில திருத்தங்கள் தேவைப்படும். அவைகளைச் செய்து அதை நிறைவேற்றலாம்.

கேள்வி: அகில இந்திய அளவில் இந்தப் பொதுத் தேர்தலின் முடிவு என்னவாக இருக்கும்?

பதில்: காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசு அமையும்.

கேள்வி: இலங்கைத் தமிழ் எம்.பி. பொன்னம்பலம் இலங்கையிலே உள்ள அரசு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: அப்படி இருந்தால் தவறு. கண்டிக்கிறோம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X