For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காப்பாற்றுங்கள்.. ஒபாமாவுக்கு மீண்டும் வைகோ இ-மெயில்

By Staff
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற அமெரிக்க அரசின் தலையீடு மட்டுமே ஒரே நம்பிக்கை. அமெரிக்காவால்தான் ஈழத் தமிழர்களைக் காக்க முடியும் என்று கோரி அதிபர் பாரக் ஒபாமாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் இமெயில் அனுப்பியுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பும் தமிழர்களைக் காக்க கோரி வைகோ இமெயில் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு மெயில் அனுப்பியுள்ளார்.

அதில் வைகோ கூறியிருப்பதாவது..

இலங்கையில் நடைபெற்று வருகின்ற தமிழ் இனப்படுகொலைத் தாக்குதல்களை, கண்ணீருடனும் வேதனையுடனும் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

இருண்டு கிடக்கின்ற இலங்கைத் தமிழர்கள் வாழ்வில், அமெரிக்காவின் உடனடித் தலையீடுதான் ஒரே நம்பிக்கை ஒளிக்கீற்றாகத் தெரிகிறது.

1977 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் நடந்த முக்கிய நிகழ்வு ஒன்றைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

அமெரிக்காவின் மசாசூசெட் மாநிலச் சட்டமன்றத்தில் மேரி எலிசபெத் ஹோவே அம்மையார் அவர்கள், ஈழத் தமிழர்கள் பிரச்சனை குறித்து மிக முக்கியமான தீர்மானத்தைக் கொண்டுவந்தார்கள்.

அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மசாசூசெட் மாநில ஆளுநர் எட்வர்டு ஜெ கிங், 1977 மே மாதம் 22 ஆம் நாளை, 'தமிழ் ஈழம் நாள்' என்று அறிவித்தார்.

இலங்கையில் இருதரப்பினரும் போரை நிறுத்தவேண்டும் என்று தாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, விடுதலைப் புலிகள் உடனடியாக போர்நிறுத்தம் அறிவித்து விட்டனர். ஆனால், திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்துகின்ற இலங்கை அரசு தாக்குதலை நிறுத்தவில்லை.

இலங்கை அதிபர் ராஜபக்சே, உலக நாடுகளை ஏமாற்றி வருகிறார். விமானக் குண்டுவீச்சையும் கனரக ஆயுதத் தாக்குதலையும் பயன்படுத்த மாட்டோம் என்று ஏப்ரல் 27 ம் தேதி அவர் சொன்னார்.

ஆனால், அன்று மாலையிலேயே விமானங்கள் குண்டுகளை வீசியதிலும், 27, 28 ஆகிய இரண்டு நாட்களிலும் நடைபெற்ற கடுமையான தாக்குதல்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

நாற்பதுகளில் யூதர்களை நாஜிகள் இனப்படுகொலை செய்ததுபோல், இன்று இலங்கையில் தமிழ் இனத்தையே இலங்கை அரசு கருவறுத்து வருகிறது.

இந்தப் பிரச்சினையில் தாங்கள் நேரடியாக உடனே தலையிட்டு உலகின் தொன்மையான பழங்குடிகளுள் ஒருவரான தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டிக் கொள்கிறோம் என்று வைகோ கூறியுள்ளார்.

கண்ணீர் விட்ட வைகோ...

மதுரையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய வைகோ, இலங்கைப் பிரச்சினை குறித்து பேசியபோது அழுதுவிட்டார்.

மதுரை அவனியாபுரம் பஸ் நிலையத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல் நாடுகளில் வாங்கப்பட்ட குண்டுகள் இலங்கையில் தமிழன் தலையில் விழுகிறது.

காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 5,600 குண்டுகளை இலங்கை ராணுவம் வீசியுள்ளது. இதில் கொத்து குண்டுகள் இந்தியா வழங்கியது. ஆயுதம் மட்டுமல்ல, ஆட்களையும் அனுப்பியுள்ளது இந்தியா.

அங்குள்ள ரேடார்களை சரிசெய்த இந்தியர்கள் சிந்தாமணி, ஏ.கே.தாகூர் காயமடைந்துள்ளனர். டீசல் சென்றால் ராஜதுரோகம் என்றால், இலங்கைக்கு ஆயுதம் சென்றது மட்டும் என்ன நியாயம்?.

இலங்கைப் போருக்கு காரணம் மத்திய அரசு, காங்., மற்றும் சோனியா என குற்றம் சாட்டுகிறேன். மகாபாரதத்தில் அபிமன்யுவை சுற்றி எல்லோரும் தாக்குவார்கள், அது போல இலங்கை தமிழர்களை சுற்றி தாக்குகிறார்கள்.

இலங்கை பிரச்னை பற்றி துண்டு பிரசுரம் கொடுத்த மாணவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சி.டிக்களாக இவை உங்கள் வீட்டுக்கு வீடு வரும் என்று கூறியபோது வைகோ அழுதுவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X