முள்ளிவாய்க்காலில் ஓயாத ராணுவ தாக்குதல் - 278 தமிழர்கள் பலி
முல்லைத்தீவு: போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும், வட இலங்கையில் ராணுவத் தாக்குதல் ஓயவில்லை. நேற்று நடந்த தாக்குதலில் 58 சிறார்கள் உள்பட 278 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவரும் மருத்துவமனையை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று அதிகாலையில் இலங்கைப் படையினர் ஏவுகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை தொடுத்தனர்.
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது எறிகணைகள் விழுந்து வெடித்தன. இதில் மட்டும் 19 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
இரட்டைவாய்க்கால், சாளம்பன், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, இரட்டைப்பனையடி ஆகிய பகுதிகளை குறி வைத்து இலங்கைப் படைகள் தாக்கின.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலை காணப்பட்டது.
பின்னர் மாலை 3 மணிக்கு ஆர்ட்டில்லரி தாக்குதல்களில் இலங்கை ராணுவம் ஈடுபட்டது.
இதில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் ரத்த வங்கிப் பகுதியில் குண்டு விழுந்து வெடித்ததில் அங்கு இருந்த நோயாளிகள் 19 பேர் உயிரிழந்தனர்.
நேற்றைய தாக்குதல்களில் 278 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 58 பேர் சிறுவர், சிறுமியர் ஆவர். 298 பேர் காயமடைந்தனர்.
கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம், இது போர் நிறுத்தம் போலத்தான் என ராஜபக்சே உறுதியாக கூறியும் கூட தொடர்ந்து நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.