ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறது இந்தியா-புலிகள்
ஸ்டேஸ்மேன் இதழுக்கு நடேசன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
தற்போதைய இந்திய மத்திய அரசின் நிலைப்பாடுகளும், செயற்பாடுகளும் எங்களுக்கு ஏமாற்றத்தையே தருகின்றன. இந்தியாவின் உண்மையான நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில் - இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் இயற்கையான கூட்டாளிகள் யார் என்பதை அறிவதில் இன்றைய இந்திய அரசு தவறி விட்டது; அது ஈழத் தமிழர்கள் தான்.
ஆனால் இந்திய அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதனால் நாங்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். போரை நிறுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை காணும் முயற்சிகள் எதனையும் இந்தியா மேற்கொள்ளவில்லை.
கடந்த சனிக்கிழமை இலங்கை விமானப்படையின் விமானங்கள் நான்கு முறை மக்கள் அதிகம் வாழும் பாதுகாப்பு வளையப் பகுதிகள் மீது குண்டுத் தாக்குதல்களை நிகழ்த்தின.
மேனன், நாராயணன் வருகைக்குப் பின்னர் தாக்குதல் அதிகரிப்பு..
பீரங்கி தாக்குதல்களும் தொடர்கின்றன. இந்திய அதிகாரிகளின் (மேனன், நாராயணன்) கொழும்பு பயணத்திற்குப் பின்னரே, தாக்குதல்கள் உக்கிரமாகியுள்ளன.
விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தவில்லை. ராணுவத்தினரே முன்னேறி வரும்போது தமிழ் மக்களை கேடயங்களாகப் பயன்படுத்தி முன்னேறுகின்றனர்.
தமிழ் மக்கள் மீது பல வழிகளிலும் மேற்கொள்ளப்படும் இன அழிப்புக்களின் உண்மைத் தன்மையை சர்வதேச சமுதாயம் இப்போதுதான் முழுமையாக உணரத் தொடங்கியுள்ளது.
தமது மண்ணில் சுதந்திரமாக வாழ்ந்து, தமது தாயகத்தை தாமே அளும் நியாயமான அரசியல் விருப்பம் எங்களது மக்களுக்கு உள்ளது. அந்த அரசியல் விருப்பங்களை வெல்வதற்கு விடுதலைப் புலிகளையே அவர்கள் தங்களது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழ் மக்களின் அரசியல் விருப்பத்திற்கான போராட்டம் அவற்றை அவர்கள் அடையாதவரை முடிவுக்கு வராது.
எனவே, இங்கு தமிழ் மக்கள் மனிதப்பேரவலம் ஒன்றை சந்தித்துள்ள இன்றைய வேளையில், உலக சமுதாயம் உடனடியாத் தலையிட்டு அவர்களைக் காக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சோனியாவே காரணம்..
இதற்கிடையே தமிழ் மக்களின் உயிர்ப்பலிக்கு சோனியா காந்தியே காரணம் புலிகள் ஆதரவு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது கணவர் ராஜீவ் காந்தியின் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் சோனியா காந்தி நடந்து கொள்கிறார். பிரபாகரனின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடிக்கும் வரை அவர் ஓயப் போவதில்லை என்றும் அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு தற்போது தமிழர்களுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை. இந்தியாவின் சார்பில்தான் அது போரிட்டு வருகிறது. இந்தியாவின் கையில் சிக்கியுள்ள பொம்மையாக மாறி விட்டது இலங்கை.
ஈழத் தமிழர்களின் உண்மையான எதிரி இலங்கை அல்ல, மாறாக இந்தியாதான் என்று அது கூறியுள்ளது.