தேர்தல்-'குடி'மகன்கள் கொண்டாட்டம்
நெல்லை: தேர்தல் பிரசாரம், கொளுத்தும் வெயில் போன்ற காரணங்களால் இம்மாதம் நெல்லை மாவட்டத்தில் சரக்கு விற்பனை 42 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு மே 13ம் தேதி நடக்கிறது. வேட்பாளர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். காலை, மதியம், மாலை, இரவு என அனைத்து வேளைகளிலும் பிரசாரம் களை கட்டி வருகிறது.
தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் டீ குடித்துவிட்டு நாள் முழுவதும் உற்சாகமாக வேலை பார்ப்பது அந்த காலம் என்றாகிவிட்டது. தற்போது தேர்தல் பிரசாரம் வரும் தொண்டர்களுக்கு சோம பானம் தேவைப்படுகிறது.
சோம பானம் இருந்தால் மட்டுமே தேர்தல் வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கிறது என்பதால் வேட்பாளர்களும், தொண்டர்களுக்கு சரக்குகளை வாங்கி குவித்து வைத்துள்ளனர்.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சரக்கு சரக்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. நெல்லையில் இம்மாதம் பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற சோம பான சரக்குகளின் விற்பனை 21 சதவீதம் அதிகரித்துள்ளது. வழக்கத்தை விட 16 ஆயிரம் பெட்டிகள் கூடுதலாக விற்பனையாகியுள்ளது.
இவற்றுக்கெல்லாம் மேலாக பீர் விற்பனைதான் கொடி கட்டி பறக்கிறது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் பீர் விற்பனை 42 சதவீதம் அதிகரித்துள்ளது. வழக்கத்தை விட 11 ஆயிரம் பெட்டிகள் கூடுதலாக விற்பனையாகி உள்ளது.
இதுகுறித்து டாஸ்மக் அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் சமயம் என்பதாலும், வெயில் காலம் என்பதாலும் சரக்கு விற்பனை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் சரக்குகளுக்கு ஆர்டர் கொடுத்து ஸ்டாக் வைத்துள்ளோம்.
விற்பனை அதிகரித்துள்ளதற்கு தகுந்தவாறு போதிய சரக்குகள் டாஸ்மக் கடைகளில் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றனர்.