நளினி-வழக்கு போட்டவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
சென்னை: நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செயய்க் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மேலும், இந்த வழக்கை தாக்கல் செய்த வேலுச்சாமிக்கு ரூ. 1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இதற்கு விளக்கம் கேட்டு சிபிஐ, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. சிபிஐ, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்ட பின்னர் அதுகுறித்து எந்த கோர்ட்டிலும் வழக்கு தொடர முடியாது, இந்த மனு விசாணைக்கு உகந்தததல்ல என்று கூறியிருந்தன.
இதையடுத்து நேற்று நீதிபதிகள் தர்மாராவ், சி.டி.செல்வம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், தேவையில்லாமல் மனு தாக்கல் செய்த வேலுச்சாமி ரூ. 1 லட்சத்தை கோர்ட் செலவாக செலுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த மனுவை உள்நோக்கத்தோடு சுய விளம்பரத்துக்காக, சுய லாபத்திற்காக தனது அரசியல் எதிரிகளுடன் தனக்குள்ள பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காகவும், எந்தவித சட்டப்பூர்வ ஆதாரம் இல்லாமல் மனுதாரர் இந்த மனுவை இக்கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.
மத்திய அரசு, ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக பல கமிட்டிகள் அமைத்திருந்தாலும் இந்த 7 பேரின் தண்டனை பற்றி விசாரிக்க நியமிக்கப்படவில்லை. 7 பேருக்கும் யாருமே நற்சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்த 7 பேரை பொறுத்தவரையில் எல்லா கதவுகளும் மூடப்பட்டுவிட்டன. இவர்கள் எல்லா உரிமைகளையும் கேட்டு முயற்சி எடுத்து பார்த்தனர். இவர்களுடைய அப்பீல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
எனவே இந்த வழக்கை தொடர மனுதாரருக்கு உரிமை இல்லை. சுத்தமான கரங்களுடன் இவர் நீதிமன்றத்தை அணுகவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக நீதிமன்றத்தை ஒரு கருவியாக்க முயற்சித்துள்ளார். மோசமான எண்ணங்களோடு இந்த கோர்ட்டை கருவியாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது. இதுபோன்ற மோசமான நடவடிக்கையை சுய விளம்பர தந்திர நடவடிக்கையை ஒழிக்க இந்த நீதிமன்றம் உறுதிபூண்டுள்ளது.
மனுதாரர் தொடர்ந்த இந்த வழக்கை கோர்ட்டு செலவுடன் தள்ளுபடி செய்வதுதான் சரியானது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி மனுதாரருக்கு ரூ.1 லட்சம் கோர்ட்டு செலவாக வழங்க வேண்டுமென்று இக்கோர்ட்டு உத்தரவிடுகிறது. இந்த பணத்தை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு மனுதாரர் 4 வாரத்தில் செலுத்த வேண்டும்.
பதிவாளர் ஜெனரல் வருவாய் வசூலிப்பு சட்டத்தின் கீழ் இந்த பணத்தை வசூல் செய்ய வேண்டும். இந்த வழக்கு என்னவென்றால் எப்படியும் நீதிமன்றத்துக்கு வரலாம், இஷ்டத்திற்கு கோர்ட்டு நேரத்தை வீணடிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்று நீதிபதிகள் கூறினர்.