இனி எல்லா வகை டவுன் பஸ்களிலும் ஒரே கட்டணம்!-'கலர்' ஏமாற்றம் நிறுத்தம்!!

சாதாரண டவுன் பஸ்களில் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.2 ஆக இருந்தது. ஆனால் சொகுசுப் பேருந்து, தாழ்தள சொகுசுப் பேரூந்து, விரைவுப் பேருந்து, எல்எஸ்எஸ், எம் போர்ட், பாயிண்ட் டூ பாயிண்ட் என கலர் கலராக பஸ்களை விட்டு அதில் கட்டணமும் கண்ணாபின்னாவென உயர்த்தப்பட்டது.
சாதாரண பஸ்களை முடிந்தவரை குறைத்துவிட்டு மேலே சொன்ன பெயர்களைக் கொண்ட பஸ்களே அதிகமாக இயக்கப்பட்டன. இவற்றில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 3 முதல் ரூ. 5 வரை போக்குவரத்து அதிகாரிகளின் மனத்துக்குத் தக்கபடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதனால் இந்த கலர் பஸ்சோ, தாழ்தளமோ வேண்டாம், சாதாரண பஸ்களையே அதிகமாக இயக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இத்தனை காலம் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது தமிழக அரசு.
இப்போது தேர்தல் வருவதால் மக்கள் கோரிக்கை காதில் விழுந்துள்ளது. அதன்படி இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி தாழ்தளமோ, சாதா பஸ்சோ அனைத்திலும் சாதாரண கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி டவுன் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 ஆக இருக்கும். அடுத்து வரும் 2 ஸ்டேஜ்களுக்கு ரூ.1 வீதம் கட்டணம் அதிகரிக்கும்.
அதே நேரத்தில் சென்னையில் ஏசி டவுன் பஸ்களில் வழக்கம் போல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
அடிக்கடி தேர்தல் வரலாம் போலிருக்கே..!












Click it and Unblock the Notifications