'ஈழத் தாய்' ஜெயலலிதா-ஆஸ்திரேலிய தமிழ் சம்மேளனம் உருக்கம்

தனி ஈழம் அமைப்போம் என்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பேச்சுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
அவருக்கு நன்றி தெரிவித்து ஆஸ்திரேலியாவில் உள்ள தென்துருவத் தமிழ் சங்க சம்மேளனம் தலைவர் சிற்றம்பலம் ராகவன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,
மாண்புமிகு சகோதரி செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கம் பல,
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களின் சங்கங்களை உள்ளடக்கிய சம்மேளனமே தென்துருவத் தமிழ் சங்கங்களின் சம்மேளனமாகும். இதன் ஆரம்ப காலத் தலைவர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில தன் பெயரைப் பதிதத் புகழ் பெற்ற விஞ்ஞான பேராசிரியர் மாமனிதர் எலியேசர் ஆவர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் வாழ்வா சாவா என்ற இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன் நீண்ட இரத்தம் தோய்ந்த அதே சமயம் அடிபணிய மறுக்கும் ஒரு தேசத்தின் வரலாற்றை ஆதி முதல் அந்தம் வரை அறிந்த ஒரு புரட்சித் தலைவரின் வழியில் வந்த திராவிட சிசு நீங்கள்.
ஆறுதல் அடைகிறோம்...
அதனால் அவைபற்றி எதுவுமே நாம் கூறத் தேவையில்லை. அண்மையில் தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் அவல நிலை கண்டு துடிக்கும் எம் உடன்பிறப்புக்களின் எழுச்சியைக் கண்டபோது தாங்க முடியாத வலியில் தவிக்கும் நாம், நாங்கள் யாரும் அற்ற அனாதைகள் அல்ல என ஆறுதல் அடைகின்றோம்.
இதற்கெல்லாம் சிகரமாக இந்திய மத்திய அரசு தமிழின அழிப்புக்கு துணைபோவதை ஆணித்தரமாக சுட்டிக்காட்டிய தங்களின் அறிக்கை அமைந்தது. இதற்காக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வாழ் ஈழத் தமிழர்களின் அன்பையும் நன்றிகளையும் தங்களுக்கும் அதிமுக கட்சிக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய மத்திய அரசின் கொள்கைதான் இன்று சிங்கள இன வெறி அரசிற்கு தமிழின அழிப்பிற்கான ஊக்கத்தை அளித்துள்ளது. பாரம்பரிய கலாசாரத்தையும் உன்னதமான வரலாற்றையும் கொண்ட பாரதத்தின் இன்றைய அரசாங்கம் அன்னிய சக்திகளின் அடிவருடியாக சோரம் போவதன் வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்றா என எண்ண வைக்கிறது.
சுதந்திர ஈழ வழி...
இந்த சமயத்தில் தங்களின் குரல் எமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. ஈழத் தமிழர்களின் விடிவிற்கு ஒரே வழி சுதந்திர ஈழமே. இதனை வலியுறுத்தி தமிழகத்தில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என உரிமையோடு வேண்டுகிறோம்.
இவை சம்பந்தமாக தமிழக சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட தாங்கள் வலியுறுத்த வேண்டும் என்பதே புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். இவற்றை செய்திட விரையுங்கள். புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் வாழுங்கள் என அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications