பஸ் கட்டணத்தை குறைக்கவில்லை-அமைச்சர் நேரு
சென்னை: பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவும் இல்லை, குறைக்கவும் இல்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், பிறகு அதைக் குறைத்து விட்டதாகவும் ஏடுகளில் எல்லாம் செய்திகள் வருகின்றன. தேர்தல் ஆணையரும் சொல்லியிருக்கிறார்.
திமுக ஆட்சி 2006ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்படவே இல்லை. அதிமுக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் 5.12.01 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு சாதாரண பேருந்துகள், எல்.எஸ்.எஸ். பேருந்துகள், எக்ஸ்பிரஸ் பேருந்துகள், டீலக்ஸ் பேருந்துகள், 'எம்' சர்வீஸ் பேருந்துகள் என்றும் பலவகை பேருந்துகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான கட்ட ணங்கள் நிர்ணயிக்கப்பட்டு அந்த கட்டணங்கள் 6.12.01 முதல் நடைமுறையில் இருந்தன.
அதற்குப் பிறகு பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. 2006ல் கழக ஆட்சி அமைந்த பிறகு பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படவும் இல்லை. குறைக்கப்படவும் இல்லை.
31.5.06 திமுக ஆட்சி்க்கு வந்தபோது சென்னை மாநகரத்தில் மட்டும் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் சாதாரணப் பேருந்துகள் 1095ம், எல்.எஸ்.எஸ். பேருந்துகள் 1043ம், எக்ஸ்பிரஸ் பேருந்து 169ம், டீலக்ஸ் பேருந்துகள் 11ம், 'எம்' சர்வீஸ் பேருந்துகள் 235ம் ஓடிக்கொண்டிருந்தன.
இதில் ஒவ்வொரு விதமான பேருந்துகளுக்கும் ஒவ்வொரு விதமான கட்டணங்கள் அதிமுக ஆட்சியிலே விதிக்கப்பட்ட உத்தரவுப்படி நடைமுறையில் இருந்தன.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களின் விருப்பத்திற்கும், கோரிக்கைக்கும் ஏற்ற வகையில் ஒரு சில நேரங்களில் சாதாரண கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைத்து அதிகக் கட்டணங்கள் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியும்,
அதைப்போலவே சில நேரங்களில் அதிக கட்டணங்கள் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து குறைந்த கட்டணங்கள் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியும் வந்துள்ளோம்.
சில வழித்தடங்களில் குறைந்த கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகப்படுத்துவதும், சில வழித்தடங்களில் அதிகக்கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கை உயர்த்தப்படுவதும் அவ்வப்போது எழுகின்ற கோரிக்கைகளின் அடிப்படையில் பேருந்துகளின் தரம் மாற்றப்படுவது உண்டே தவிர கட்டணங்கள் எல்லாம் அதிமுக ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்டது தான்.
இப்போதும் அதிமுக ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கட்டணம் தொடருகிறதே தவிர, தேர்தல் விதிமுறைகளை மீறி கட்டண உயர்வோ, கட்டணக் குறைப்போ செய்யப்படவில்லை என்பதே உண்மை.
கட்டணங்களை உயர்த்துவது என்றாலோ, குறைப்பது என்றாலோ அதற்காக அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுத்தான் செய்யப்பட வேண்டும். அதற்கு முதல்வர் ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்பது தான் உண்மை.
ஆனால் தேர்தல் நேரம் என்பதால் ஏதோ நடைபெற்று விட்டது என்பதைப்போல எதிர் கட்சியினர் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.