மதுரை தேர்தல் அதிகாரியை மாற்றுங்கள்-பிரகாஷ் கரத் புகார்
மதுரை: மதுரை தொகுதியில் சில இடங்களில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது. அவற்றின் மீது சரியான நடவடிக்கை எடுக்க தவறிய மாவட்ட தேர்தல் அலுவலர், காவல் ஆணையர் ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் பொது செயலர் பிரகாஷ் கரத் தேர்தல் ஆணையத்துக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
மதுரை தொகுதியில் திமுக சார்பில் அழகிரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் சார்பில் மோகன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் மதுரையில் சில இடங்களில் அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் கரத், தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவிற்கு புகார் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில்,
மதுரை தொகுதியில் திமுக வேட்பாளரும், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகனுமான முக அழகிரி போட்டியிடுகின்றார். அவர் அரசு அதிகாரிகளை தவறாக பயன்படுத்தி வருகிறார் என்பது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய புகார்களை தகுந்த ஆதரத்துடன் எங்களது கட்சி வேட்பாளர் மோகன் தேர்தல் அதிகாரிகளிடம் அளித்துள்ளார்.
ஆனால் அந்த புகார் மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் சட்டசபை இடைத்தேர்தலின் போது திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். தற்போது, அதே போன்று மதுரை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர்.
மதுரையில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கான எந்த நடவடிக்கையும் தேர்தல் அதிகாரிகள் எடுக்கவில்லை.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து மதுரை தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது.
அவைகளின் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட தேர்தல் அலுவலர், மதுரை மாநகர காவல் ஆணையர், அரசின் பொதுத் தொடர்பு அலுவலர் ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும், அந்த பொறுப்புக்களுக்கு நடுநிலையுடன் செயல்படும் அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
மேலும், மதுரை தொகுதிக்கு சிறப்பு பார்வையாளர் ஒருவரை அனுப்பி வைத்து தேர்தல் விதிமுறை மீறல் எதுவும் நிகழாமல் தடுக்குமாறு வேண்டுகிறோம் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.