மதுரையில் மர்ம நபர்கள் வினியோகித்த ஈழ சிடி!
மதுரை: மதுரை திருமங்கலம் பகுதியில் ஈழத் தமிழர்கள் குறித்த சிடிக்கள் வீடுடகளில் வினியோகம் செய்யப்பட்டன.
இந்தப் பகுதியில் உள்ள கடைகள், வீடுகளின் வாயில்களில் அதிகாலையில் இந்த சிடிக்கள் கிடந்தன.
மேலும் அதிகாலையில் நடைபயிற்சி சென்றவர்கள், பஸ்களுக்கு காத்திருந்தவர்களுக்கும் கார்களில் வந்த சிலர் இந்த சிடியை தந்துவிட்டுப் போயினர்.
'எங்கள் கண்ணீர் கதை' என்ற பெயரிலான இந்த சிடிக்களில் இலங்கையில் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசுவது, குழந்தைகள் உடல் சிதறிக் கிடப்பது போன்ற காட்சிகள் அடங்கியுள்ளன.
சுமார் 18 நிமிடம் ஓடும் இந்த சிடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சும் அடங்கியுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் அரசு மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற கோரிக்கையுடன் இந்த சிடியில் காட்சிகள் முடிவடைகின்றன.
சிடியை வினியோகித்தது யார் என்ற விசாரணையில் க்யூ பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.