மின் கட்டணத்தை உயர்த்த திட்டம்-விஜய்காந்த்

தொழிலாளர்கள் தினத்தையொட்டி தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியேற்றி இனிப்பு வழங்கிய அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தேர்தலை மனதில் கொண்டு பஸ் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எம் சர்வீஸ், டீலக்ஸ் என்ற பெயரில் சென்னையிலும், டி.எஸ்.எஸ், எஸ்.எப்.எஸ் என்ற பெயர்களில் மற்ற மாவட்டங்களிலும் கலர் கலராக பஸ் விட்டு பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்தனர்.
இதை சட்டசபையில் நான் ஆதாரத்துடன் பேசினேன். எம் சர்வீசுக்கு அரசாணையே கிடையாது என்று சட்டசபையில் எடுத்துக் கூறினேன். எனக்கு பதிலளித்த அமைச்சர், கட்டண உயர்வு இல்லை என்றார்.
ஆனால் இப்போதோ ரூ. 21 வசூலித்த கட்டணம் ரூ.8.50ஆகக் குறைந்துள்ளது. இதிலிருந்து மக்களை ஏமாற்றி கட்டணம் வசூலித்தது உண்மை என்று தெரிய வருகிறது.
மின் கட்டணத்தை உயர்த்த திட்டம்?:
இதே போல் இன்னொரு தேர்தல் விதி மீறலும் இருக்கிறது. இந்த மாதம் மின்சார வாரியம் எங்குமே மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கவில்லை. இதனால் தேர்தல் முடிந்தவுடன் மின் கட்டணம் உயருமோ என்ற அச்சம் மக்களிடையே உள்ளது.
எந்த காரணத்தை கொண்டும் தேர்தலுக்கு பின் பஸ் கட்டண உயர்வோ, மின் கட்டண உயர்வோ இருக்கக் கூடாது.
அதிமுகவும், திமுகவும் கூட்டு கொள்ளை அடித்து வருகிறார்கள். மக்கள் பிரச்சனைகளை தீர்க்காத இந்த அரசை தூக்கியெறிய வேண்டும் என்றார்.
முன்னதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் பிரச்சாரம் செய்த அவர் பேசுகையில்,
காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் மக்களை நேசித்தார்கள். மக்கள் பிரச்சனையை தீர்க்க பாடுபட்டனர். ஆனால் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதில் தான் குறியாக உள்ளன.
மக்களுக்காக பாடுபடும் தேமுதிகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. நான் உங்களை நம்புகிறேன். நீங்கள் என்னை நம்ப வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications