சென்னை ரயிலை கடத்தியது ஆந்திர நக்சலைட்?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மின்சார ரயிலை மர்ம மனிதன் கடத்திச் சென்று, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது நேருக்கு நேராக மோதவிட்டதில் 4 பயணிகள் பலியாயினர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
பலியானவர்களில் 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ட்டன. இன்னொருவரின் அடையாளம் தெரியவில்லை. இவன் தான் ரயிலைக் கடத்தினானா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
அந்த அடையாளம் தெரியாத இந்த நபருக்கு 40 வயது இருக்கும். அழுக்கான பேண்ட் அணிந்துள்ளார். உள்ளாடையாக டவுசரும் போட்டுள்ளார். அந்த நபரின் உடலில் உள்ள காயங்களை பார்க்கும்போது ரயிலில் இருந்து வெளியே குதித்ததால் ஏற்பட்ட காயங்கள்போல் காணப்படுகிறது. வலது கையில் தெலுங்கில் பச்சை குத்தியுள்ளார். அது நாகாராஜா அல்லது தேகாராஜா என்று தெரியவில்லை. இது அவரது பெயராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதனால் இந்த நபர் ஆந்திராவைச் சேர்ந்த நக்ஸலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்புத்துறையினர் தனி விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக பெங்களூரிலிருந்து அதிகாரிகள் குழு வந்துள்ளது. அதே போல தமிழக சிபிசிஐடி போலீஸ் விசாரணையும் நடக்கிறது. சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் தலைமையில் விசாரணை நடக்கிறது.
சென்டிரல் ரயில் நிலையத்தில் 26 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பதிவாகியுள்ள படங்களையும், அடையாளம் தெரியாமல் இருக்கும் இறந்து போன நபரின் படத்தையும் ஒப்பிட்டுப் விசாரணை நடக்கிறது.
மேலும் ஆந்திர போலீசாரின் உதவியையும் தமிழக சிபிசிஐடி போலீசார் நாடியுள்ளனர்.
சென்ட்ரலில் புறநகர் ரயில்வே பிளாட்பாரத்தில் இந்த நபரின் புகைப்படத்தைக் காட்டி சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரை பலமுறை பார்த்துள்ளதாக பிளாட்பாரத்தில் தொலைபேசி நிலையம் வைத்துள்ள ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக அடிக்கடி தனது கடைக்கு வந்து போன் செய்தார் என்றும் கூறியுள்ளார். அவர் யாருக்கு போன் செய்தார் என்ற விசாரணையும் நடக்கிறது.












Click it and Unblock the Notifications