கருப்புப் பணம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பெருமளவில் கருப்புப் பணத்தை குவித்து வைத்திருப்பதாகவும், கிட்டத்தட்ட ரூ. 72 லட்சம் கோடி அளவுக்கு கருப்புப் பணம் அங்கே முடங்கியிருப்பதாகவும் பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி சமீபத்தில் பிரச்சினையக் கிளப்பினார்.
தற்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்தப் பிரச்சினையில் கையில் எடுத்துள்ளனர். இது தேர்தல் பிரச்சினையாக மாறி விட்டது.
இந்த நிலையில் முன்னாள் சட்ட அமைச்சர் ராம் ஜேட்மலானி, முன்னாள் பஞ்சாப் டிஜிபி கே.பி.எஸ். கில் உள்ளிட்ட ஆறு பேர் உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு ஏப்ரல் 22ம் தேதி தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
பின்னர் மே 4ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு இன்று பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
இதை தாக்கல் செய்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், தேர்தல் நேரத்தில் இந்த வழக்கை எதிர்கட்சிகள் தொடுத்திருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக குறை கூறினார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே இது குறித்து அரசுக்கு முதன் முறையாக தெரிய வந்த போதே அரசு சரியான நடவடிக்கைகளை துவக்கிவிட்டது. இந்த விஷயத்தில் எதுவும் எல்லை மீறி போகவில்லை.
இந்த விஷயத்தில் ஒளி மறைவு எதுவும் இல்லை. அனைத்து வங்கி கணக்குகளும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படும் என்றார்.
சமீபத்தில் சுவிஸ் வங்கிகள் ஒரு அறிக்கையை வெளியிட்டன. அதில், தங்களது வங்கிகளில் இந்தியர்கள்தான் அதிக அளவில் பணத்தைப் போட்டு வைத்துள்ளதாக அவை கூறியிருந்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.