ஈழம்: ப.சிதம்பரம் தான் முதல் குற்றவாளி - ராமதாஸ்
தஞ்சை: இலங்கையில் தமிழர்கள் பலியாக முதல் காரணமாக இருப்பது சிதம்பரம் தான். அவர் தான் முதல் குற்றவாளி என என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தஞ்சை தொகுதி மதிமுக வேட்பாளர் துரை பாலகிருஷ்ணனை ஆதரித்து திருவையாறில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் தமிழர்கள் சாக காரணமாக இருந்தது உள்துறை அமைச்சர் சிதம்பரம் தான். அவர் தான் முழு முதல் குற்றவாளி. விடுதலைப்புலிகளுக்கு அழிவே கிடையாது. அவர்களை அழிக்கவும் முடியாது. அவர்கள் புற்றீசல் போல தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார்கள்.
இலங்கைக்கு இந்திய படைகளை எப்படி அனுப்ப முடியும் என்று குலாம்நபி ஆசாத் கேள்வி கேட்கிறார். இலங்கையில் தனி ஈழம் அமைக்க வேண்டும் என்பது தேசவிரோத செயல் என காங்கிரஸ்காரர்கள் கூறகின்றனர்.
தனி ஈழம் அமைந்தால் மகிழ்ச்சி என்று கூறிய கருணாநிதி இதற்கு என்ன பதில் கூறப்போகிறார். தனி ஈழம் அமைவது அவசியமா? இல்லையா? இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.
ஆனால், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டு பொங்கி எழுந்த ஜெயலலிதா தனி தமிழீழம் அமைவது தான் ஒரே வழி என்று கூறியுள்ளார். இன்னும் ஒரு படி மேலேச்சென்று அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று புதிய மத்திய அரசு அமையும் போது இலங்கைக்கு இந்திய படைகளை அனுப்பி தனி ஈழம் பெற்று தருவேன் என்று கூறியுள்ளார் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications