வாக்குப்பதிவுக்கு 36 மணி நேரத்துக்கு முன்பு எஸ்.எம்.எஸ். மூலம் பிரசாரம் செய்ய தடை
சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு 36 மணி நேரத்திற்கு முன்பு எஸ்எம்எஸ் மூலம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 13ம் தேதி நடக்கிறது. சுவர் விளம்பரம், பேனர் போன்றவற்றை வைப்பதற்கு தேர்தல் ஆணையம் கடும் தடை விதித்திருப்பதை அடுத்து கட்சிகள் எஸ்எம்எஸ் மூலம் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு முந்தைய 36 மணி நேரத்தில் எஸ்எம்எஸ் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது குறித்து சென்னையில் ரிப்பன் கட்டடத்தில் நடந்த கூட்டத்தில் தென் சென்னை தேர்தல் அதிகாரி பாலாஜி பேசுகையில்,
மே 11ம் தேதி மாலை 5 மணிக்கு பின்னர் யாரும் எஸ்எம்எஸ் மூலம் பிரசாரம் செய்யக்கூடாது என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி வாக்குப்பதிவுக்கு 36 மணி நேரத்துக்கு முன்பு எஸ்எம்எஸ் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல் டைரி, காலண்டர் உள்ளிட்டவற்றில் வேட்பாளர்களின் படங்கள் பொறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் செலவு குறித்து தொடர்ந்து தகவல் வந்து கொண்டே இருப்பதால் அதை உடனடியாக கணக்கிட முடியவில்லை.
வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை மூன்று நாட்களுக்கு ஒரு முறை தாக்கல் செய்ய வேண்டும். மொத்த செலவு கணக்கை வாக்குப்பதிவு முடிந்து ஒரு மாதத்துக்குள் அளிக்க வேண்டும். இதிலிருந்து தவறும் வேட்பாளர்களின் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள்.
பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திர குறித்து விழிப்புணர்ச்சி நடத்தும் போது வழக்கமான வாக்குப்பதிவு இயந்திரத்தின் பாதி அளவில் இருக்கும் மாதிரிகளை பயன்படுத்த வேண்டும்.
தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெறாமல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வாகன அணிவகுப்பு பிரசாரம் செய்ய வேண்டும் என்ற பாஜக தலைவர் இல கணேசனின் கோரிக்கையை ஏற்றுகொள்ள முடியாது என்றார் பாலாஜி.