என்னையும், ராமதாஸையும் தாக்க சதித் திட்டம் - அன்புமணி புகார்
பா.ம.க.வின் தேர்தல் இணைய தளம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. அன்புமணி இதைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான எங்கள் கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. இன்றைக்கு தேர்தல் நடந்தால் 36 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். 13-ந்தேதி தேர்தல் நடக்கும் போது 40 தொகுதிகளையும் எங்கள் கூட்டணி கைப்பற்றும்.
கருணாநிதி முதலில் 40 தொகுதிகளும் கிடைக்கும். பின்னர் 30 என்றால், இப்போது 25 என்கிறார்.
தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வில்லை.
இலங்கையில் பாதுகாப்பு பகுதியிலும், தொடர்ந்து சிங்கள ராணுவம் குண்டு வீசி வருகிறது. அங்கு போர் நிறுத்தம் நடைபெறவில்லை. ஆனால் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக கபட நாடகம் ஆடுகிறார்கள்.
தேர்தல் பயத்தால் பஸ் கட்டணத்தை குறைத்தார்கள். இப்போது என்னையும், டாக்டர் ராமதாசையும் தாக்கி பேசி வருகிறார்கள். பல இடங்களில் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது.
வேலூரில் பணம் பட்டுவாடா செய்ததை நாங்களே பிடித்துக் கொடுத்தோம். ஆனால் எங்கள் கட்சிக்காரர்கள் மீது வழக்குப்போட்டுள்ளார்கள்.
தேர்தலில் எப்படியாவது பா.ம.க.வை தோற்கடித்தே தீர வேண்டும் என்று சூழ்ச்சி செய்து சதி திட்டம் தீட்டியுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, அரக்கோணம் ஆகிய தொகுதிகளில் பொதுமக்கள் ஓட்டு போட முடியாதபடி வன்முறையை தூண்ட வெளியூர் ஆட்களை கொண்டு வந்து குவித்துள்ளனர்.
மேலும் எங்களை பிரசாரங்களில் கடுமையாக தாக்கிப் பேசி வருவோர், உடல் ரீதியாகவும், என்னையும், டாக்டர் ராமதாஸையும் தாக்க சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
இதுகுறித்து கட்சித் தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசித்து வருகிறோம். தேர்தல் ஆணையத்திடமும் புகார் செய்வோம் என்றார் அன்புமணி.