சொத்து: பழனிசாமிக்கு அதிகம் -ஆரூணுக்கு குறைவு
மதுரை: கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் இந்த முறை போட்டியிடும் கே.சி.பழனிசாமியின் சொத்து சுமார் ரூ. 23 கோடி அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் ஜே.எம்.ஆருணின் சொத்து சுமார் ரூ. 1 கோடியை 21 லட்சம் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு மக்களவை தொகுதியும் உள்ளது. இந்த தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்களில் இந்த முறை சுமார் 25 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் கரூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, கடந்த முறை தனக்கு ரூ. 52 கோடியே 87 லட்சம் சொத்து இருப்பதாக கணக்கு காட்டினார். ஆனால், இம்முறை ரூ. 75 கோடியே 53 லட்சத்து 74 ஆயிரம் சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.
அதாவது இந்த ஐந்து ஆண்டில் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 22 கோடியே 66 லட்சத்து 74 ஆயிரம் அதிகரித்துள்ளது. தமிழகத்திலே இவர் தான் அதிக சொத்து கணக்கு காட்டியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
அதே போன்று பெரியகுளம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது மறுசீரமைப்புக்கு பின் தேனி தொகுதியாக அந்த தொகுதியின் வேட்பாளருமான ஜே.எம்.ஆரூண் கடந்த முறை 15 கோடியே 35 லட்சம் சொத்து இருப்பதாக கணக்கு காட்டினார்.
ஆனால், இம்முறை ரூ. 14 கோடியே 14 லட்சம் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 21 லட்சம் குறைந்துள்ளதாக தெரிகிறது.
தமிழக தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக சொத்து குறைத்து காட்டியவர் இவர் தான் என டிவியில் விளம்பரம் போடாத குறையாக காங்கிரஸ் தொண்டர்கள் தம்பட்டம் அடித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications