திமுக தேர்தல் அலுவலகத்தை சூறையாடிய பெரியார் தி.க.வினர்
சென்னை: கோவையில் ராணுவ வாகனங்களைத் தாக்கிய பெரியார் தி.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில், திமுக தேர்தல் பணிமனையை பெரியார் தி.கவினர் இன்று தாக்கி சூறையாடினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
கோவை அருகே நேற்று இலங்கைக்கு ஆயுதங்களைக் கொண்டு செல்வதாக சந்தேகப்பட்டு ராணுவ டிரக்குகளை நிறுத்தி பெரியார் தி.க.வினர் தாக்குதல் நடத்தினர். ஐந்து டிரக்குகள் இதில் சேதமடைந்தன.
இதுதொடர்பாக அமைப்பின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் திமுக தேர்தல் பணிமனையை பெரியார் தி.கவினர் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெருவில் 93-வது வட்ட தி.மு.க. தேர்தல் பணிமனை அலுவலகம் உள்ளது. நேற்று நள்ளிரவில் பெரியார் தி.க. தொண்டர்கள் வந்தனர்.
அங்கிருந்த திமுகவினரை அவர்கள் அடித்துத் தாக்கினர். பின்னர் அலுவலகத்தில் இருந்த கம்ம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை நொறுக்கி உடைத்தனர்.
இந்த திடீர் தாக்குதலில் 93-வது வட்ட தி.மு.க. செயலாளர் ரவியின் மகன் ராஜேந்திரன், ராஜேஷ், சுந்தர், பாலாஜி ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஐஸ்ஹவுஸ் போலீஸில் திமுக சார்பில் புகார் தரப்பட்டது.
போலீஸார் புகார் பதிவு செய்து பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த தமிழரசன் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் தமிழரசன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியார் சிலை உடைப்பு..
இந்த சம்பவத்தின் பரபரப்பு தீருவதற்குள் அதே வி.எம். தெருவில் உள்ள பெரியால் சிலை அடித்து உடைக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. மோதல் வெடிக்காமல் தடுக்கும் பொருட்டு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications