ரயில் கடத்தல் குறித்து துப்பு தந்தால் ரூ. 25,000 பரிசு -போலீஸ்
சென்னை: சென்னையில் மின்சார ரயிலை கடத்தியவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ. 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.
சென்னையில் ரயிலை கடத்தி சென்று வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 4 பேர் பலியானார்கள். அவர்களின் மூன்று பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
நான்காவது நபர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததாலும் அவர் கையில் தேஜராஜ் என தெலுங்கில் பச்சை குத்தப்பட்டிருப்பதையும் அடுத்து அவர் ஆந்திராவை சேர்ந்த நக்சலைட்டாக இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர்.
இந்நிலையில் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரத்தின் மேற்பார்வையில் 6 தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் தேஜராஜ் என்பவரின் புகைப்படத்தை கையில் எடுத்து கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தொலைபேசி பூத் ஒன்றில் அவர் வெளி மாநிலங்களுக்கு தொலைபேசியில் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கு கடைசியாக தொலைபேசியில் பேசியிருப்பது தொடர்ந்து நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான இரண்டு போலீஸ் தனிப்படை ஆந்திரா விரைந்துள்ளது. ஒன்று திருப்பதியிலும், ஒன்று ஹைதராபாத்திலும் விசாரணை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆந்திர போலீசார் உதவி வருகின்றனர்.
அப்போது திருப்பதி போலீசார் தேஜராஜின் கூட்டாளிகள் என்ற சந்தேகத்தில் இருவரை கைது செய்தனர். அவர்களிடம் தமிழக போலீசார், ஆந்திரா போலீஸ் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேஜராஜின் புகைப்படம் மற்றும் கை ரேகை அடையாளம் ஆகியவை ஏற்கனவே போலீசிடம் இருக்கும் நக்லைட்கள் பட்டியலில் இருக்கிறதா என ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் கூறுகையில்,
அடையாளம் தெரியாத வாலிபர் தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். மர்ம நபரின் உடலை வாங்க இதுவரை யாரும் வராததால், அவர் மீது சந்தேகம் வலுக்கிறது. திருப்பதிக்கு சென்று பார்த்த போது அந்த விலாசத்தில் யாரும் இல்லை என்பது தெரியவந்தது.
ரயில்வே, சி.பி.சி.ஐ.டி. போலீசார் உள்பட மொத்தம் 5 தனிப்படை போலீசார் ஆந்திராவில் முகாமிட்டுள்ளனர். இந்த வழக்கில் துப்பு கொடுத்தால் ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும். 044-22502550, 044-22502510 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். துப்பு கொடுப்பவருடைய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
ஆந்திரா சென்றுள்ள தனிப்படையினர் இன்று அல்லது நாளை சென்னை திரும்புவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications