பஸ் கட்டணக் குறைப்பு ரத்து செய்த தேர்தல் ஆணையம் - வாபஸ் பெற்ற தமிழக அரசு
தமிழகத்தில் சமீபத்தில் எம் சர்வீஸ், மஞ்சள் போர்டு பஸ் உள்ளிட்ட சிறப்புப் பேருந்துகளில் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது. இதை தேர்தல் ஸ்டன்ட் என எதிர்க்கட்சிகள் வர்ணித்தன. மேலும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவும் இதை தேர்தல் நடத்தை விதி மீறல் என கூறியிருந்தார்.
இதையடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று டெல்லி விரைந்தார் ஸ்ரீபதி. தேர்தல் ஆணையத்திடம், தற்போதைய அரசு இதுவரை பஸ் கட்டணத்தை உயர்த்தவும் இல்லை, குறைக்கவும் இல்லை. கடந்த ஆட்சிக்காலத்தில்தான் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன என்று விளக்கினார்.
ஆனால் அதை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. பஸ் கட்டணம் தொடர்பாக என்ன முடிவெடுத்திருந்தாலும் அதை ரத்து செய்ய வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று முதல் பஸ் கட்டண விகித மாற்றம் திரும்பப் பெறப்படுவதாகவும், பழைய பஸ் கட்டணமே மீண்டும் வசூலிக்கப்படும் எனவும் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.