ரசாயன ஆயுத தாக்குதலுக்கு ஆயத்தமாகும் இலங்கை ராணுவம்!
வன்னியில் தற்போது 6 சதுர கிலோமீட்டர் பரப்பிளவிலான இடத்திற்குள் விடுதலைப் புலிகளை சுருக்கி விட்டதாக கூறியுள்ளது இலங்கை ராணுவம். இருப்பினும் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய புலிகள் இயக்கத் தலைவர்கள் இருக்கும் இடம் குறித்துத் தெரியவில்லை.
இந்த மிகக் குறுகிய இடத்திற்குள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழ் மக்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்பகுதியில், மிகப் பெரிய அளவிலான இறுதித் தாக்குதலை நடத்த இலங்கை ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்காக அனைத்து வகையான கனரக ஆயுதங்களையும் கடந்த சிலநாட்களுக்கு முன்பு இப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளது இலங்கை ராணுவம். மேலும் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்கள், பேரழிவு ஆயுதங்களையும் அது குவித்து வைத்து வருகிறது.
விரைவில் பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் மிகப் பெரிய தாக்குதலை இலங்கைப் படைகள் நடத்தக் கூடும் என விடுதலைப் புலிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த இலங்கை ராணுவம் திட்டமிட்டுள்ளதால், இலங்கை வீரர்களுக்கு அணிவதற்காக 200 விஷவாயு முகமூடிகள் வரவழைக்கப்பட்டுள்ளனவாம். வடுவக்கல் என்ற இடத்திற்கு இந்த முகமூடிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
எனவே பேரழிவை ஏற்படுத்தும் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி மொத்த தமிழ் மக்களையும் அழித்து விட இலங்கைப் படைகள் திட்டமிட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது.
இலங்கை ராணுவத்தின் இந்த கொடூரத் திட்டம் காரணமாக மிச்சம் மீதி உள்ள அப்பாவி தமிழ் மக்கள் பேராபத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.