கர்நாடகா, ஆந்திரா போய் பாருங்கள்.. அதிகாரிகளை அனுப்பும் விஜய்.. பின்னணியில் பயங்கர காரணம்!
சென்னை: தமிழ்நாட்டின் முக்கியமான சில அதிகாரிகளை கர்நாடகா, ஆந்திர பிரதேசத்திற்கு ஆய்விற்காக அனுப்ப முதல்வர் விஜய் உத்தரவிட்டு உள்ளார். அவரின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் நிர்வாகத்திலும் கொள்கைகளிலும் பல அதிரடி மாற்றங்களை முதல்வர் விஜய் மேற்கொண்டு வருகிறார். இதில் சில வரவேற்க்க தக்க வகையில் உள்ளன. சில விமர்சனம் செய்யும் வகையில் உள்ளன.

அந்த வகையில், தற்போது தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் செயல்பாடுகளை முற்றிலும் சீரமைக்கும் நோக்கில் அவர் எடுத்துள்ள புதிய முடிவு அரசியல் மற்றும் அரசு நிர்வாக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக தமிழ்நாட்டின் ஸ்டைலை மாற்றும் விதமாக அமைந்து உள்ளது.
கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களில் செயல்பட்டு வரும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார். அவற்றின் வருவாய் மாதிரிகள் மற்றும் மதுபான விநியோக முறைகளை விரிவாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு விஜய் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அண்டை மாநிலங்களில் ஆய்வு ஏன்?
தமிழகத்தில் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்படும் டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தில் நிலவி வரும் முறைகேடுகள், வருவாய் இழப்புகள் மற்றும் போலி மதுபான புழக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
அதேபோல் அண்டை மாநிலங்களில் மதுபான கலாச்சாரம் நன்றாக உள்ளது. அங்கே வெளிநாட்டு பிராண்டுகள் கிடைக்கின்றன. அதோடு அங்கே ஜென் ஜி அதிகம் வர இந்த கலாச்சாரம் முக்கிய காரணமாக உள்ளது. சென்னையில் அந்த சூழல் இல்லை. இதற்காக அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் மதுபான விற்பனை மற்றும் ஆயத்தீர்வை வசூல் எவ்வாறு ஆன்லைன் மயமாக்கப்பட்டு, வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுகிறது என்பதை ஆராய இந்த உயர்மட்டக் குழு அனுப்பப்படவுள்ளது.
அங்குள்ள சிறந்த நடைமுறைகளைத் தமிழகத்திலும் செயல்படுத்துவதே இந்த ஆய்வின் முதன்மை நோக்கமாகும்.
இந்த உயர்மட்டக் குழுவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஆயத்தீர்வை துறை நிபுணர்கள் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது. அவர்கள் மூன்று மாநிலங்களுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி, விரிவான அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
தனியார்மயமாக்கப்படுகிறதா மதுபான விற்பனை?
முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் மதுபான விற்பனை விரைவில் தனியார்மயமாக்கப்பட வாய்ப்புள்ளதா என்ற விவாதம் பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதுபான சில்லறை விற்பனையில் தனியார் பங்களிப்பு நடைமுறையில் உள்ளன.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்க, படிப்படியாக அரசு தனது கட்டுப்பாட்டைக் குறைத்துக் கொண்டு, விற்பனையைத் தனியார் வசம் ஒப்படைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே முதல்வராக பொறுப்பேற்றவுடன் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகளை மூட விஜய் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த உயர்மட்டக் குழுவின் அறிக்கை வெளியான பிறகு, மதுபான விற்பனையில் தனியார் பங்களிப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.














Click it and Unblock the Notifications