டவரில்லாத இடத்திலும் பயன்படுத்தலாம்.. பிஎஸ்என்எல் சேட்டிலைட் போன் அறிமுகம்! ஐபோனுக்கு நிகரான விலை
டெல்லி: நம் நாட்டில் புதிய சேட்டிலைட் போனை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டவர் கிடைக்காத இடத்தில் கூட இந்த போனை பயன்படுத்த முடியும். இதன் விலை ரூ.1 லட்சத்துக்கு 34 ஆயிரத்து 166 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சேட்டிலைட் போனை யாரெல்லாம் பயன்படுத்தலாம்? இந்த போனை எப்படி வாங்கலாம்? என்பது பற்றிய பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது பிஎஸ்என்எல் சார்பில் சேட்டிலைட் போன் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போன் என்பது உலகளாவிய சேட்டிலைட் சேவைகளை வழங்கி வரும் இன்மார்சாட் (Inmarsat) நிறுவனத்தின் பார்ட்னர்ஷிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எங்கு சென்றாலும் சேட்டிலைட் மூலமாக இந்த போன் இயங்கும்.செல்போன் டவர் இல்லாத இடத்திலும் இந்த போனை பொதுமக்களால் எளிதாக பயன்படுத்த முடியும்.
சேட்டிலைட் அடிப்படையில் செயல்படுவதால் இந்த செல்போனுக்கு டவர் எதுவும் தேவையில்லை. இதனால் பேரிடர் காலங்களில் இந்த போனை எளிதாக பயன்படுத்த முடியும். பிஎஸ்என்எல் சேட்டிலைட் போனின் விலை ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 166 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இது தற்போது ஐபோன் 17 ப்ரோ விலைக்கு நிகராக உள்ளது. ஐபோன் 17 ப்ரோ விலை ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 900 ஆக உள்ள நிலையில் பிஎஸ்என்எல் சேட்டிலைட் போனின் விலை ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 166 ஆக இருக்கிறது.
இந்த சேட்டிலைட் போனில் பிற ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஐபோன்களை ஒப்பிடும்போது பிரத்யேகமான சில அம்சங்கள் உள்ளன. அதன்படி டவர் இல்லாத இடத்தில் இந்த போனை எளிதாக பயன்படுத்தி பேச முடியும். வாய்ஸ் கால் வசதி மூலம் டவர் இல்லாத இடத்தில் இருந்து கூட தெளிவாக பேச முடியும். பேரிடர் காலங்களில் எஸ்ஓஎஸ் எமர்ஜென்சி சப்போர்ட்டை வழங்கும். சார்ஜிங் வசதிகள் இல்லாவிட்டாலும் கூட நீண்டநேரம் பயன்படுத்தும் வகையில் பேட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நம் நாட்டில் சேட்டிலைட் போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள் உள்ளன. சாதாரண மக்கள் சேட்டிலைட் போன் பயன்படுத்த தடை உள்ளது. இதனால் இந்த போனை அனைவராலும் எளிதாக பயன்படுத்த முடியாது. இந்த போனை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் முதலில் மத்திய தொலைதொடர்பு அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அவர்களின் அனுமதியை பெற்றால் மட்டுமே இந்த பிஎஸ்என்எல் சேட்டிலைட் போனை வாங்கி பயன்படுத்த முடியும்.
அதன்படி பாதுகாப்பு துறை, பேரிடர் பணி, சுரங்க பணி, கடல்சார் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி வருவோருக்கும், டவர் இல்லாத மலைப்பகுதிகளில் ஆன்மிக பயணங்கள் செல்வோருக்கும் இந்த பிஎஸ்என்எல் சேட்டிலைட் போன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செல்போனை வாங்கி பயன்படுத்த விரும்புவோர் இதுபற்றிய கூடுதல் விவரங்களை அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் சென்று அறிந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் 9768866652 என்ற எண்ண தொடர்பு கொண்டு பேசலாம்.












Click it and Unblock the Notifications