Vaiko: நோபல் பரிசு கருத்து வாபஸ்! திருமாவளவனிடம் வருத்தம் தெரிவித்தார் வைகோ!
சங்கரன்கோவில்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என நான் சொன்ன கருத்து அவரை புண்படுத்தியிருந்தால் அதை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சங்கரன்கோவிலில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். தவெக அமைச்சரவையில் இருந்து கொண்டு திமுகவுடன் நட்பு திருமாவளவன் சொன்னதற்கு அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கூறியிருந்தேன். திருமாவளவனுக்கு நோபல் பரிசு என கூறியது அவரது மனதை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமாவளவனை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. அந்த வார்த்தையை திரும்ப பெற்றுக் கொல்கிறேன். திருமாவளவன் மீது எனக்கு கோபமோ, மன கசப்போ இல்லை. அவரது வளர்ச்சிக்கு நான் எப்போதும் பக்கபலமாக இருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், முதல்வர் விஜய் கரூர் போகக் கூடாது , பேசக் கூடாது என உச்சநீதிமன்றத்திற்கு திமுக சென்றது. ஆனால் கோர்ட் சாட்டையடி கொடுத்துள்ளது. தவெக கூட்டணியில் இருந்தாலும் திமுகவுடன் கூட்டணியிலும் நட்பிலும் தொடர்கிறோம் என திருமாவளவன் கூறியதற்கு அவருக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்றார்.
இந்த நிலையில் அரியலூரில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்த போது வைகோவின் நோபல் பரிசு குறித்த கேள்விக்கு அவர் கூறுகையில், "நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தமைக்கு நன்றி. பரிசு கிடைத்தாலும் அவருக்கு நன்றி" என தெரிவித்திருந்தார்.
அது போல் இன்றைய தினம் அசோக் நகரில் நடந்த கூட்டத்தின் போதும் திருமாவளவன், தனக்கு நோபல் பரிசுக்கெல்லாம் பரிந்துரைக்கிறார்கள் என வைகோவை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வில்லிசேரி பகுதிக்குள்பட்ட சத்திரப்பட்டியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் திட்டத்தை வைகோ தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, சீமை கருவேல மரங்கள் அகற்றம் என பல்வேறு பிரச்சினைகளுக்காக 20 ஆண்டு காலமாக போராடி வருகிறேன்.
முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு தீவிரமாக இருந்த போது அதை எதிர்த்து நடைபயணம், மறியல் என போராட்டங்களை நடத்தினோம். தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்த போது அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடை வாங்கப்பட்டது.
மேகதாது அணை பிரச்சினைக்கு எதிராகவும் கட்சி பாகுபாடின்றி போராடினோம். பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பது தொடக்கக் கால கோரிக்கை. ஆனால் நிதி நெருக்கடிக்கு இடையே அதை எப்படி செயல்படுத்த முடியும்?
தற்போதைய சூழலில் தவெக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம் பெற்றுள்ளது. செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது எவ்வளவு ஊழல் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் இப்போது மீண்டும் தேர்தல் நடந்தால் கூட விஜய் 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார் என்பதே தற்போதைய களநிலவரம் என வைகோ கூறினார்.














Click it and Unblock the Notifications