“அதிமுக ஐடி விங் சரியாக செயல்படவில்லை”.. எடப்பாடி பழனிசாமி அப்செட்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
சென்னை: சட்டசபை தேர்தலின்போது அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் சரியாகச் செயல்படவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இந்தக் கருத்தை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாள்தோறும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தோல்வி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். தருமபுரி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்கவில்லை. தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததால் கே.பி.அன்பழகனின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்த பின் அமைப்பு செயலாளர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு எம்எல்ஏவுமான கே.பி.அன்பழகன் புறக்கணித்தார். அதேபோல, ஓசூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பாலகிருஷ்ண ரெட்டியும் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிற அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து கேட்டறிந்தார். அத்துடன், கட்சியின் வளர்ச்சிப் பணிகள், உள்ளாட்சித் தேர்தல் பணிகள் உள்ளிட்டவைக் குறித்தும் கேட்டறிந்தார். அத்துடன், அதிமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெகவினர் சமூக வலைதளம் மூலமாகவே கட்சியை வளர்த்து ஆட்சியை பிடித்தனர். தேர்தலின்போது அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் சரியாக செயல்படவில்லை. இனி ஏஐ தொழில்நுட்பத்தை திறமையாக பயன்படுத்துவோருக்கே அதிமுக ஐடி விங்கில் பதவி வழங்கப்படும்.
தவெக அளவுக்கு அதிமுக ஐடி விங் செயல்படவில்லை. தற்போதைய ஆட்சியாளர்களுக்கு விவசாயிகளின் உழைப்பின் அருமை, அவர்களின் கஷ்டம் தெரியாது. அதனால் தான் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை தற்போதைய ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை. தேர்தல் தோல்விக்கு ஐ.டி.விங் மட்டும் தான் காரணம் என்று நினைக்காதீர்கள், பிற சார்பு அணிகளும் சரியாகச் செயல்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிபெற அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும் எனப் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.














Click it and Unblock the Notifications