இப்போது, பட்டினி சாவு-இதுவரை 12 தமிழர்கள் பலி
இலங்கை அரசு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குத் தேவையான எந்த அடிப்படை உதவிகளையும் செய்யாமல் அவர்களை அடிமைகளைப் போல இடம் பெயர்ந்து வந்தோருக்கான முகாம்களில் தங்க வைத்துள்ளது.
சாப்பாடு, மருந்து, குடிநீர் என எதுவுமே முறையாக வழங்கப்படுவதில்லை.
இதன் காரணமாக பெருமளவிலான மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். அவர்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 12 பேரும் நட்டாங்கண்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. இவர்களில் 6 பேர் சிறார்கள் ஆவர்.
மேலும் பலர் பட்டினியால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோய் எதிர்ப்புச் சக்தியே இல்லாமல், எலும்பும் தோலுமாய் காணப்படுகின்றனர் தமிழ் மக்கள்.
கிட்டத்தட்ட 500 தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடி சிகிச்சை தருவற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலில் மருத்துவர்கள், பணியாளர்கள் வருவதாக இருந்தது. ஆனால் அப்பகுதியில் கப்பல்கள் செல்ல இலங்கை கடற்படை தடை போட்டுள்ளதால் கப்பல் வர முடியாத நிலை.
தமிழர்களை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கிறோம் என்று கூறும் இலங்கை அரசு, மறுபக்கம் மீட்டு வந்த தமிழர்களை பட்டினி போட்டு கொன்று வருவதாக தமிழ் மக்கள் குமுறுகின்றனர்.
ஈழப் பகுதியில் பிச்சைக்காரர்களையே பார்க்க முடியாத ஒரு நிலை இருந்தது. இப்போது உணவுக்காக கையேந்த வேண்டிய நிலை. இந்தக் கொடுமைகள் எப்போது ஓயும்..?
விமானத் தாக்குதல்...
இதற்கிடையே, நேற்று முள்ளிவாய்க்கால் பகுதியில், மக்கள் வசிக்கும் இடங்களில் விமானப்படைத் தாக்குதலை நடத்தியுள்ளது இலங்கை படை.
நிறுத்தி விட்டதாக வெளி உலகுக்கு அறிவித்து விட்டு விமானத் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது இலங்கை.
நேற்று பிற்பகல் 1.30 மணி முதல் 2 மணி வரை மொத்தம் 8 குண்டுகளையும், 16 ராக்கெட்டுகளையும் வீசித் தாக்கியது இலங்கைப் படை.
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது நேற்று அதிகாலை 1 மணியளவில் நடத்தப்பட்ட ஆர்ட்டில்லரி தாக்குதலில் 6 தமிழர்கள் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
நேற்று காலை முதல் இலங்கை ராணுவம் நடத்திய தொடர் ராக்கெட் தாக்குதலில், 47 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 56 பேர் காயமடைந்தனர்.
விமானப்படைத் தாக்குதலில் 32 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 46 பேர் படுகாயமடைந்தனர். விமானப்படையினர் வீசிய குண்டு கூடாரம் ஒன்றில் விழுந்ததில் அதில் தங்கியிருந்த 5 பேர் உயிரிழந்தனர்.