தாக்கினால் சுட நேரிடும் - பெரியார் தி.க.வுக்கு ராணுவம் எச்சரிக்கை
கடந்த வாரம் கோவை அருகே, ராணுவ வாகனங்கள் மீது பெரியார் தி.க.வினரும், மதிமுகவினரும் திடீர் தாக்குதலி்ல ஈடுபட்டனர்.
5 ராணுவ லாரிகள் தீவைத்து எரிக்கப்பட்டன. ராணுவத்தினரின் உடமைகளும் சூறையாடப்பட்டன.
இலங்கைக்கு ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக சந்தேகித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பெரியார் தி.க.வுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா பிராந்தியத்துக்கான ராணுவ தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ஈப்பன் ஜேக்கப் கோச்சகன் கூறுகையில், இனிமேல் ராணுவ வாகனங்களைத் தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ராணுவ வாகனங்களை மறித்து இடையூறு செய்ய முயன்றால் தற்காப்புக்காக ராணுவ வீரர்கள் துப்பாக்கியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு விடும். இதனால் உயிரிழப்பு நேரிடக் கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதன் மூலம், ராணுவ வாகனங்ளை யாரேனும் தடுக்க முயன்றால் சுடுவதற்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இலங்கையை இந்திய அரசு நம்புகிறது-ப.சி
இந்த நிலையில் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கனரக ஆயுதங்களைக் கொண்டும், விமானங்களைக் கொண்டும் அப்பாவித் தமிழர்களைத் தாக்க மாட்டோம் என இலங்கை அரசு உறுதி மொழி அளித்துள்ளது. அதை இந்தியா நம்புகிறது.
இந்தியாவுக்கு அளித்த உறுதிமொழிகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புவோம்.
ராணுவத்தை அனுப்பி ஈழத்தை அமைத்துத் தருவேன் என ஜெயலலிதா கூறுவது பொறுப்பற்ற பேச்சு. சட்ட விரோதமான பேச்சு.
1971ம் ஆண்டு வங்கதேசம் உருவாக்கப்பட்டதன் வரலாறு ஜெயலலிதாவுக்குத் தெரியாது. அதை அவர் முதலில் முழுமையாக படித்துத் தெரிந்து கொள்ளட்டும்.
பெரியார் தி.க.வினர் ராணுவ வாகனத்தைத் தாக்கியது மோசமான சம்பவம். மிகவும் சீரியஸானது. அந்த அமைப்பை தடை செய்வது குறித்து என்னால் உடனடியாக பதிலளிக்க முடியாது. அனைத்து அம்சங்களும் பரிசீலிக்கப்படும் என்றார் சிதம்பரம்.
ரவிசங்கருக்கு புலிகள் கோரிக்கை:
இந்த நிலையில், இலங்கையில் போரை நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுமாறு வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம், விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் இதுதொடர்பாக தொலைபேசி மூலம் ரவிசங்கரிடம் பேசியுள்ளார்.
அப்போது நடேசன் கூறுகையில், போர் நடைபெறும் இடங்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் அமைதியை விரும்புகிறோம். போர் நிறுத்தத்துக்கு புலிகள் தயாராக இருக்கிறார்கள். அதற்கான முயற்சிகளைச் செய்யுங்கள் என்று நடேசன் வேண்டுகோள் விடுத்ததாக புலிகள் ஆதரவு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.