சர்ச் பிரசாரம்-நெல்லை அதிமுகவினர் இருவர் கைது
நெல்லை: தேர்தல் விதிமுறைகளை மீறி சர்ச்சில் பிரசாரம் செய்த அதிமுகவினர் இருவரை பாளை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.
பாளை பகுதி அதிமுக பேரவை செயலாளராக இருப்பவர் எம்.சி.ராஜன். அவரும், அவரது தாயாரும், மாநகராட்சி கவுன்சிலருமான மணியம்மாள் ஆகியோர் பாளை கதீட்ரல் சர்ச்சுக்கு வந்தனர். அங்கு ஆலயத்திற்கு வருபவர்களிடம் அதி்முகவுக்கு ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தகவல் பாளை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் சர்ச் முன்பு பிரசாரம் செய்வது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது என்று கூறி எம்சி ராஜன் அவரது தாய் மணியம்மாள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். எம்சி ராஜன் மற்றும் அவரது தாய் கைதான தகவல் அதிமுக கூட்டணியினருக்கு தெரிய வரவே அவர்கள் அனைவரும் பாளை கதீட்ரல் சர்ச் முன்பு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.