பாஸ்போர்ட் அதிகாரி சுமதிக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை மண்டல பாஸ்போர்ட அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் மற்றும் அவரது கணவர் டாக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தத்கல் பாஸ்போர்ட் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு உதவிய டிராவல் ஏஜென்சியை சேர்ந்த பாத்திமா, ராஜூஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
சிபிஐ அதிகாரிகள் சுமதியின் வங்கி லாக்கரில் இருந்து ரூ. 50 கோடி மதிப்பிலான நகைகள், பணம், சொத்துப் பத்திரங்களைக் கைப்பற்றினர். இந்நிலையில் இவர்கள் நான்கு பேரும் தங்களுக்கு ஜாமீன் தருமாறு சிபிஐ நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இதை தொடர்ந்து சிபிஐ தாக்கல் செய்த மனுவில் அவர்களை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம் பாத்திமாவுக்கு மட்டும் ஜாமீன் வழங்கியது. மற்ற மூவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அவர்களை சிபிஐ அதிகாரிகள் மூன்று நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்தது. அவர்களை நேற்று மே 4ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு பின் நேற்று அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அப்போது அவர்கள் மூன்று பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டு கொண்டனர். ஆனால், அவர்கள் சாட்சிகளை கலைத்துவிடுவார்கள் என சிபிஐ அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த சுமதியின் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சுமதி ரவிச்சந்திரன் ஏற்கனவே பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். அவரால் பாஸ்போர்ட் அலுவலகத்துக்குள் நுழைய முடியாது. எனவே சாட்சிகளை அழிக்க முடியாது. அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.
பின்னர் நீதிபதி கே.நாகநாதன் அளித்த தீர்ப்பில்,
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மூன்று பேரும் போலீஸ் காவலிலும் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
அவர்கள் தினமும் விசாரணை அதிகாரி முன்னிலையில் காலை 11 மணி, பிற்பகல் 3 மணிக்கு ஆஜராக வேண்டும். தங்களது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
நீதிமன்ற அனுமதியில்லாமல் சென்னையை விட்டு வெளியில் எங்கும் செல்லக் கூடாது. அவர்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார் நீதிபதி.












Click it and Unblock the Notifications