ராணுவ வாகனம் மீது தாக்குதல்-ஜெ தான் காரணம்: ப.சி
சிவகங்கை: இலங்கை தமிழர்கள் தொடர்பாக சமீபத்தில் ஜெயலலிதா பேசிய பேச்சுகள் தான் கோவையில் ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு தூண்டுதலாக அமைந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சிதம்பரம் அத் தொகுதிக்கு உட்பட்ட கண்டனூரில் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக அமைதியாக இருந்த சில நாசகார கும்பல்கள், நக்சலைட்களை போன்றவர்கள் மீண்டும் தலைதூக்க துவங்கியுள்ளனர். அவர்கள் தைரியமாக ராணுவத்தை தாக்கியுள்ளனர். இது அழிவுக்கான பாதை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் இதை தங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள அபாய மணியாகவும், எச்சரிக்கையாகவும் எடுத்து கொள்ள வேண்டும்.
நான் உள்துறை அமைச்சராக இருப்பதால் பெரியார் திராவிட கழகம் போன்றவைகளுக்கு தடை விதிக்க வேண்டுமா என்பது குறித்து எந்த கருத்தும் சொல்ல முடியாமல் இருக்கிறேன். ஆனால் ஒரு பொறுப்பான குடிமகன் என்ற வகையிலும், ஒரு தேசிய கட்சியின் உறுப்பினர் என்ற வகையிலும் அவர்களை எச்சரிக்கிறேன்.
இலங்கை தமிழர்கள் தொடர்பாக சமீபத்தில் ஜெயலலிதா பேசியது தான் ராணுவ வாகனங்கள் மீதான தாக்குதலுக்கு துண்டுகோளாக இருந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.
தனி ஈழம் என்ற ஜெயலலிதாவின் பேச்சு பொறுப்பற்றது. தேச விரோதமானது. வங்கதேசம் எப்படி உருவானது என்ற வரலாறு ஜெயலலிதாவுக்கு தெரியாது. அது எந்த சூழ்நிலையில் உருவானது என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை ராணுவம் வான்வழி மற்றும் கன ரக ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டது. அண்டை நாடான இலங்கையில் அமைதி திரும்ப தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
போர் பகுதியில் இன்னும் பல ஆயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள். இந்திய அதிகாரிகள் அவர்களை பத்திரமாக பாதுகாப்பு பகுதிக்கு அழைத்து வர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இலங்கையின் அரசின் வேண்டுகோளை ஏற்று விடுதலை புலிகள் சரணடைய வேண்டும்.
விடுதலை புலிகள் உட்பட அனைத்து தமிழர் கூட்டமைப்பும் இலங்கை அரசுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications