குண்டு வைத்து கொல்லப் போவதாக ஜெ.வுக்கு கொலை மிரட்டல்
சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது வெடிகுண்டு வைத்துக் கொல்லப் போவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயன் இதுகுறித்து நேற்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அந்த மனுவில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கு இன்று (நேற்று) பகல் 12.30 மணி அளவில் இன்லேன்ட் கடிதம் வந்தது. கடிதத்தை அனுப்பியவர் பெயரோ, முகவரியோ இல்லை.
அதில், முன்னாள் முதல்-அமைச்சரை கொலை செய்து விடுவோம் என்று கடுமையான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு முன்னாள் முதல்-அமைச்சருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவி்த்திருந்தார்.
மிரட்டல் கடிதத்தில், நீங்கள் ரவுடி வக்கீல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, அரசுக்கும், போலீசுக்கும் பிளவை உண்டாக்கும் கருவியாக இருக்கிறீர்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் பிளவை உண்டாக்கும் வகையில் உங்கள் செயல்பாடு உள்ளது.
எனவே உங்களை மே 1-ந் தேதியில் இருந்து 4-ந் தேதிக்குள் குண்டு வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
நீங்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் போது சக்தி வாய்ந்த குண்டு வெடிக்கலாம். தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டது போல நீங்களும் கொலை செய்யப்படுவீர்கள்.
தேர்தல் பிரசாரத்திற்கு கிளம்பும் போது உங்கள் வீட்டு வாசலில் குண்டு வெடிக்கலாம். நீங்கள் கொலை செய்யப்படும் தினம் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை தினமாக கடைப்பிடிக்கப்படும். எச்சரிக்கையாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று தெளிவான ஆங்கிலத்தில், டைப் செய்யப்பட்டு அந்தக் கடிதம் இருந்தது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போயஸ் கார்டனில் சோதனை...
மேலும் அவரது வீட்டு வாசலில் குண்டு வெடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், போலீசார் போயஸ் கார்டனில் சோதனை நடத்தினர்.
கொலை மிரட்டல் கடிதத்தை தடவியல் நிபுணர்களுக்கு அனுப்பியுள்ளனர். அதை எழுதிய மர்ம நபரை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications