இலங்கைக்கு சீனா 1 மில்லியன் டாலர் நிதியுதவி
பெய்ஜிங்: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெருமளவில் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கி வரும் சீனா, தற்போது 1 மில்லியன் டாலர் நிதியுதவியயை அளிக்கிறது.
மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக இந்த நிதியுதவியை அளிக்கிறதாம் சீனா. இடம் பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு உதவ இந்த நிதியை இலங்கை பயன்படுத்திக் கொள்ளுமாம்.
இதுகுறித்து சீன உள்நாட்டுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷாஸூ செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் நாங்கள் மிகுந்த அக்கறை செலுத்துகிறோம்.
இலங்கையில் சமூக ஸ்திரத்தன்மை, தேசிய மறு சீரமைப்பு ஆகியவற்றை பராமரிக்க இலங்கை மக்களுக்கு அடிப்படை உரிமை உண்டு. இதை உலக சமுதாயமும் உணர் வேண்டும்.
விரைவில் அங்கு அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும். இலங்கை வளர்ச்சிப் பாதையில் நடைபோட வேண்டும் என விரும்புகிறோம் என்றார் அவர்.
கனடா போடும் இரட்டை வேடம்..
இதற்கிடையே, இலங்கை விவகாரத்தில் கனடா இரட்டை வேடம் போட்டு வருகிறது.
இலங்கைக்கு உதவுவதற்காக ஏற்கனவே நிதியுதவி அளித்துள்ள கனடா மேலும் 3 மில்லியன் டாலரை அனுப்புகிறதாம்.
இதுகுறித்து கனடா நாட்டு சர்வதேச ஒத்துழைப்புத்துறை அமைச்சர் பெவ் ஓடா கூறுகையில், இடம் பெயர்ந்து வந்து முகாம்களில் தங்கியுள்ள 2 லட்சம் தமிழர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, உறைவிடம் உள்ளிட்டவற்றை வழங்க இந்த நிதி உதவும்.
கடந்த பிப்ரவரி மாதம் 4.5 மில்லியன் டாலர் தர நாங்கள் உறுதி அளித்தோம். ஆனால் கூடுதலாக நிதி வேண்டும் என இலங்கை கோரியுள்ளது. எனவே கூடுதலாக 3 மில்லியன் டாலர் நிதி விடுவிக்கப்படுகிறது என்றார். ஓடா தற்போது கொழும்பு வந்துள்ளார்.
அதிபர் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா ஆகியோரை அவர் சந்தித்துப் பேசினார்.
ஒரு பக்கம் தாராளமாக நிதியுதவியை அறிவித்துள்ள கனடா மறுபக்கம், தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும் என இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேசமயம், இலங்கையின் நடவடிக்கைகளில் கனடா குறுக்கிடாது என்றும் அவர் கூறியுள்ளார். கனடா மக்களுக்கும், இலங்கை மக்களுக்கும் இடையே நீண்ட வரலாறு உள்ளது. எனவே நாங்கள் இலங்கையை வற்புறுத்த முடியாது. அவர்களுக்கென்று சில திட்டங்கள் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.