துருக்கியில் மணமகன்-மணமகள் உட்பட 45 பேர் கொலை
அங்காரா: துருக்கியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குள் துப்பாக்கிகளுடன் வந்த மர்ம கும்பல் 45 பேரை சுட்டுக் கொன்றது. இந்த தாக்குதலுக்கு குர்தீஷ் தீவிரவாதிகள் தான் காரணம் என உள்ளூர் மீடியா குற்றம்சாட்டியுள்ளது.
துருக்கி நாட்டின் தென் கிழக்கு பகுதியில் உள்ள மர்டின் மாகாணத்தில் உள்ள பில்ஜி என்ற கிராமம் உள்ளது. இங்கு நேற்று அந்த கிராம தலைவர் ஹமீத் செல்பியின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த முகமுடி அணிந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தியது. அந்த கும்பல் கண்மூடித்தனமாக சுட்டதில் மணமகன், மணமகள் உட்பட 45 பேர் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.
இதில் ஹமீத் குடும்பத்தை சேர்ந்த 10 பேரும், 6 குழந்தைகளும் அடங்குவர். படுகயாமடைந்த 6 பேர் மசிடகி நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து துருக்கி போலீசார் அப்பகுதிக்கான அனைத்து தொடர்பையும் ரத்து செய்துவிட்டனர். அப்பகுதியை தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
போலீஸ் விசாரணையின் போது அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஹமீத் குடும்பத்துக்கு வேண்டாத மற்றொரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.
இது துருக்கி உள்துறை அமைச்சர் பெசிர் அடாலே கூறுகையில்,
அப்பாவி உயிர்களை பலி வாங்கிய இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதல் சம்பவம் கேள்வி பட்டவுடனே அந்த பகுதிக்கு பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பி வைத்தோம். இந்த தாக்குதலுக்கும், தீவிரவாதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
அதே சமயத்தில் துருக்கியில் தனி நாடு கேட்டு போராடி வரும் குர்தீஷ் பிரிவினைவாதிகளுக்கு இந்த தாக்குதலில் சம்பந்த இருக்கலாம் என உள்ளூர் மீடியா தெரிவித்துள்ளது.
ஏனென்றால் மணமகன், மணமகள் குடும்பத்தினர் இருவரும் பிரிவினைவாதிகளை எதிர்த்து போராடி வரும் துருக்கி அரசின் கிராம பாதுகாப்பு படையில் இருக்கின்றனர். இவர்களை பழி வாங்கும் நோக்கத்தில் குர்தீஷ் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தெரிவித்துள்ளன.