இலங்கைக்கு நிதி-கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்
சென்னை: இலங்கைக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 100 கோடி நிதியுதவி மற்றும் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ. 25 கோடி நிதியை தமிழர்களின் மறுவாழ்வுக்காக எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவான திட்டம் தயாரிக்க வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தான் கேட்டுக் கொண்டிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் முதல்வர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இடம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பான தாங்கள் ஏப்ரல் 28ம் தேதி எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன்.
தமிழக அரசு அறிவித்துள்ள நிதியுதவிக்கு நன்றி. இது வரவேற்புக்குரியது. மிகவும் சிந்தனைக்குரிய ஒன்று.
மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 100 கோடி மற்றும் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ. 25 கோடி நிதியை தமிழர்களின் மறுவாழ்வுத் திட்டத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவான திட்டம் தயாரிக்குமாறு நான் வெளியுறவுத்துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார்.