For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோனியாவின் சென்னை-புதுச்சேரி பிரசாரம் திடீர் ரத்து!

By Staff
Google Oneindia Tamil News

Sonia Gandhi
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சென்னை, புதுச்சேரி பிரசார பொதுக் கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டன.

இத் தகவலை காங்கிரஸ் தமிழக தேர்தல் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாகவும், புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்தும் இன்று நடக்கவிருந்த பிரசாரக் கூட்டங்களில் பேச சோனியா திட்டமிட்டிருந்தார்.

ஆனால், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருப்பதால் சென்னை கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்ததாக சோனியாவுக்கு கருப்புக் கொடி காட்டவும் சில அமைப்புகள் திட்டமிட்டிருந்தன. திரையுலகினரும் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் போராட்டம் நடத்த இருந்தனர்.

இந் நிலையில் சோனியா தனது ‌சென்னை, புதுச்சசேரி பிரசாரக் கூட்டங்களை திடீரென ரத்து செய்துள்ளார். இத் தகவலை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் உறுதி செய்தார்.

முன்னதாக சோனியா காந்தியின் வருகையையொட்டி புதுச்சேரியிலும், சென்னையிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை வர இருந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்லவும் அங்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு மீண்டும் சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் திரும்பி தீவுத்திடல் அருகே உள்ள ஐ.என்.எஸ். ஹெலிபேட் தளத்தில் இறங்கவும்,

அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் தீவுத் திடல் மேடைக்கு வந்து தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தார். தீவுத் திடலில் இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், பூவை ஜெகன்மூர்த்தி, ஸ்ரீதர் வாண்டையார் உள்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் பேச இருந்தனர்.

கருணாநிதி வர மாட்டார் என அறிவிப்பு...

இந் நிலையில் முதுகு வலி மற்றும் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதி இன்று தான் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார்.

எனவே அவரால் சோனியா காந்தி கூட்டத்திற்கு வர முடியாத நிலை உள்ளதாக காங்கிரசிடம் திமுக தரப்பு தெரிவித்தது.

இந் நிலையில் சோனியா காந்தியே தனது கூட்டத்தை ரத்து செய்துவிட்டார்.

முன்னதா சோனியா காந்தியின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேடை அமைக்கும் பணி தொடங்கியதுமே தீவுத்திடல் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. செக்போஸ்ட் அமைக்கப்பட்டு தீவுத்திடலுக்குள் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் தீவுத்திடல் முழுவதும் சோதனை செய்து வந்தனர். மோப்பநாய்களும் மைதானம் முழுவதும் வலம் வந்து கொண்டே இருந்தன. ஏராளமான போலீசாரும், சிறப்பு பாதுகாப்பு படையினரும் தீவுத்திடலில் குவிக்கப்பட்டிருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X