அவதூறு பேச்சு: சஞ்சய் தத்-அமர்சி்ங் மீது வழக்கு
லக்னெள: உத்தர பிரேதச முதல்வர் மாயாவதிக்கு கட்டிபிடி வைத்தியம் செய்ய தயாராக இருப்பதாக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய சமாஜ்வாடி கட்சி பொது செயலாளர்கள் சஞ்சய் தத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் மவு என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி பொதுசெயலாளரும், நடிகருமான சஞ்சய் தத் தனது தாயார் ஒரு முஸ்லிம் என்பதால் தான் தடா வழக்கில் கைது செய்தபோது மோசமாக நடத்தினர் என பேசினார். இதையடுத்து அவர் மீது மத உணர்வை தூண்டுவதாக குற்றம்சாட்டப்பட்டு, வழக்குபதிவு செய்யப்பட்டது.
வழக்கு தொடரப்பட்ட போதிலும் அவர் தனது சர்ச்சைக்குறிய பேச்சுக்களை மாற்றி கொள்ளும் முடிவில் இல்லை. தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார்.
அடுத்து பிஜ்னேர் பகுதியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், தான் நடித்த முன்னாபாய் எம்.பி.பி.எஸ் (தமிழில் அந்த படம் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் கமல் நடிப்பில் வெளிவந்தது) படத்தில் வந்ததை போல் உத்தர பிரதேசம் முதல்வர் மாயாவதிக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்ய தயாராக இருப்பதாகவும், மாயாஜால முத்தம் கொடுக்கவும் ரெடி என பேசினார்.
இதையடுத்து அவர் மீது மூன்றாவதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் மீது பிஜ்னேர் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
அமர் சிங் மீது வழக்கு...
இந்த கூட்டத்தில் சர்ச்சை இதோடு முடிந்துவிடவில்லை. அடுத்து பேசிய சமாஜ்வாடி கட்சியின் மற்றொரு பொது செயலாளர் அமர்சிங் பேசுகையில், வாஜ்பாய்க்கும், மாயாவதிக்கும் மூன்று முறை திருமணம் நடந்தது. ஆனால் ஒரு முறை கூட விவாகரத்து ஆகவில்லை என்றார்.
அதாவது பாஜகவும், பகுஜன் சமாஜ் கட்சியும் மூன்று முறை கூட்டணி வைத்துள்ளன என்பதை குறிக்கும் வகையில் சொல்வதாக அவர் சொன்னார். இதையடுத்து அமர்சிங் மீதும் மாயாவதியை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.