தமிழகத்தில் இன்று அத்வானி பிரசாரம்-மோடியும் வருகை
சென்னை: பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நடிகை ஹேமமாலினி, ராஜ்நாத் சிங் ஆகியோர் தமிழகம் வருகிறார்கள். இன்று அத்வானி நாகர்கோவிலில் பிரசாரம் செய்கிறார்.
இதுகுறித்து பாஜக மீடியா தொடர்பாளர் கே.டி.ராகவன் கூறுகையில், அத்வானி, நரேந்திர மோடி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், நடிகை ஹேமமாலினி ஆகியோர் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கின்றனர்.
அத்வானி இன்று காலை தூத்துக்குடி வந்து அங்கிருந்து நாகர்கோவில் சென்று பிரசாரம் செய்கிறார்.
பிற்பகலில் அவர் ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட பரமக்குடியில் திருநாவுக்கரசரை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார்.
மாலையில் சென்னை வந்து அங்கு பிரசாரம் மேற்கொண்டு விட்டு பின்னர் டெல்லி கிளம்புகிறார்.
மூத்த தலைவரான வெங்கையா நாயுடு ஏற்கனவே ஒரு வாரமாக தமிழகத்தில் பிரசாரம் செய்து வருகிறார். தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், வேலூர், திருச்சி, பொள்ளாச்சி, ஈரோடு, நீலகிரி தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார்.
நரேந்திர மோடி 9ம் தேதியும், ராஜ்நாத் சிங் 10ம் தேதியும் வருகிறார்கள்.
ஹேமமாலினியின் வருகை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றார் ராகவன்.